பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, January 8, 2010

சாதிகளை ஒழித்த தலைவன்! - ஜெகத் கஸ்பர்


நாட்பட, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எனக்கு ஆழ்ந்த ஈர்ப்பும், ஈடுபாடும் வரக் காரணம் போர்க்கள வெற்றிகளின் சிலிர்ப்போ, ஆயுதப் போராட்டத்தின் உள்மனம் சார்ந்த கேள்விக் குரிய கவர்ச்சிகளோ அல்ல.

சமூகக் களத்தில் அது ஏற்படுத்தி வந்த தாக் கங்களும், புதிய பரிமளிப்புகளும் -அவை தந்த புதிய நம்பிக்கைகளுமே முக்கிய காரணங்கள்.

குறிப்பிட்டுச் சொல்வதானால் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை இரண்டையும் கூறலாம்.சாதி இரண்டொழிய வேறில்லை -இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் என்றெல்லாம் இன்றும் மேடைகளில் நன்றாகத்தான் பேசுகிறோம்.

ஆனால் திரும்பும் திசையெங்கும் தெரிகிற சாதீயத்தின் திரைமறை வக்கிரங்கள் தமிழ் இனத்தின் சமூக மரபணுவை ஆழப் பீடித்துவிட்ட புற்றுநோய் என்றும், அதை குணப்படுத்துதல் எளிதல்ல என்றும் அறிவுசார், முடிவு செய்திருந்த காலத்தின்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமும்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் புதிய நம்பிக்கையின் ஒளிச்சிதறல்களைத் தந்தன.

பொதுவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சாதி பேதம் பார்க்கப்படுவதில்லை யென்பதும், எந்தப் படிவங்களிலும் ஒருவரது சாதி பதிவு செய்யப்படுவதில்லையென்பதும், போராளி கள் தங்களுக்குள் ஒருவரது சாதி பற்றி அறிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லையென் பது மட்டுமல்ல -அதுபற்றின பிரக்ஞைகளே இல்லாதிருந்தார்களென்பதும் நீண்ட ஆய்வுகள் மூலம் எமது வேரித்தாஸ் வானொலி கண்டெடுத்த முடிவுகள்.

இத்துணைக்கும் வரலாற்று ரீதியாக ஈழத் தமிழ்ச் சமூகம் குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகம் கெட்டியான சாதீயப் படிநிலைகள் கொண்டதொன்றாகவே இருந்து வந்திருக்கிறது. சமூக-பொருளாதார- பண்பாட்டு- கல்வி வெளிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை மிகவும் பின்தங்கியதாகவே மிக நீண்ட காலம் இருந்துள்ளது. இந் நிலையை தமிழீழ விடுதலை இயக்கம் -முழக்கங்களும், பிர கடனங்களும் செய்யாமல் தன் இயல்பான இயங்கி யல் ஓட்டத்திலேயே இடைமறித்திருக்கிற தென்பது எதிர்காலத்தின் சமூகமானுடவியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகளால் வியப்புடன் போற்றப்படப் போகும் மகத்துவம் கொண்ட உண்மைகளில் ஒன்று.

ஈழத்து நண்பர் ஒருவர் உரையாடலின் போது கூறிச் சென்றதொரு நிகழ்வு -ஊர் விபரம் மறந்து விட்டேன்... சாவகச்சேரிக்குப் பக்கம் என்பதாக நினைவு... தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் எடுக்கும் கிணற்றில் உயர் சாதியினர் மலம் அள்ளிப் போட... முதலில் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் நேரிற் சென்று பேசி செய்தவர்களை மன்னிப்புக் கேட்க வைத்து -இனிமேல் ஒருபோதும் அவ்வாறு நடக்காதென்ற உறுதியையும் ஊராரிடமிருந்து பெற்று வந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த நாள் மீண்டும் அவ் உயர்சாதியினர் மலம் அள்ளிக் குடிநீர் கிணற்றில் போட, குற்றவாளிகளை அழைத்து வந்து அக்கிணற்றடியிலேயே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

நான் தீவிர மரண தண்டனை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவன். அதுபோலவே முறைப்படியான நீதி விசாரணைகள் நடத்தப்படாமல், குற்றவாளி தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க வாய்ப்புத் தரப்படாமல் தண்டனை வழங்கப்படுவதிலும் உடன்பாடில்லை.

ஆயினும் சக மனிதருக்கான குடிநீரில் மலம் அள்ளிப் போட முடிகிறவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது, அவர்களை மனிதர்களாக நாம் மதிக்க வேண்டிய தேவையும் இல்லை. எனவே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது சரியே என்று அக்கணத்தில் என் மனதிடை ஓடிய எண்ணம் நினைவுக்கு வருகிறது.

அந்த நண்பர் தொடர்ந்தும் குறிப்பிட்டார், மேலே விவரித்த அந்த நிகழ்வுக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உயர் சாதியினரின் வெளிப்படையான சமூக வன்கொடுமைகள் நின்று விட்ட தென்று.விடுதலைப் போராட்ட இயக்கத்திற்குள் திருமணங்கள் ஆணும்- பெண்ணும் இணைகிற மிக இயல்பான நிகழ்வுகளாகவே இருந் திருக்கின்றன.

சாதி பார்க்கிறவர்களை இயக்கத்தை விட்டே வெளியேற்றுகிற ஒழுக்க நடைமுறையை கொண்டிருந்திருக்கிறார்கள். தங்களது ஆளுகைப் பரப்பில் ""தமிழ்மொழி தான் நமது தேசிய அடையாளம் -அதனைக் கடந்த ஒன்றாக நிச்சயம் சாதி இருக்கக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்திருக்கிறார்கள்.உண்மையில் தமிழகத்தில் -இந்தியாவில் சமூக நீதிப் பேரியக்கம் எப்படி எல்லா சமூக மக்களும் அரசியல் -அரசு நிலைகளில் பங்கேற்கிற நிலையை உருவாக்கியதோ அவ்வாறே ஈழத்தில் விடுதலைப் போராட்ட இயக்கம் அதனை சாத்தியப்படுத்தியிருந்திருக்கிறது. விடுதலைப் போராட்ட வீரர்களின் சாதி- சமூக அடையாளங்களைப் பற்றிப் பேசுவதே குறையுடைத்த செயல். எனினும் மேற்குறிப்பிட்ட உண்மையை வலுப்படுத்த வேண்டி இதனைச் சொல்ல நேரிடுகிறது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவரென்பதும், தமிழ்ச்செல்வன், நடேசன் போன்ற முக்கிய தலைவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத் தவர்களென்பதும் இவர்களையும் சூசை போன்ற இன்னபிற தளபதியர்களையெல்லாம் ஈழத்து உயர் சாதியினரான வேளாள மக்களில் மிகப் பெருவாரியானோர் தங்களின் வரலாற்று நாயகர்களாக ஏற்றுப் போற்றி மதித்து வணங்கினார்களென்பதும் சாதி மனநிலையை (Caste Consciousness) அல்லது சாதிய மனநிலை வெளியை சுருக்குவதில் விடுதலைப் போராட்டம் சாதித்த மிகப்பெரும் வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.விடுதலைப் போராட்டம் பின்னடைவு கண்டு நிற்கிற இக்கால கட்டத்தில், போராட்டம் சாதித்த பெருமைமிகு சமூக வெற்றிகள் தொடர்ந்து நிலைபெறச் செய்யப்படுமா என்ற கேள்விகள் கவலையோடு எழுகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை "சென்னை சங்கமம்' போல் ஈரோடு மக்கள் கொண்டாடிய ""நம்ம ஈரோடு-கூடல் 2010'' நிறைவு நாளில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைப் போற்றி ""பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற முழக்கத்தோடு நடந்த தந்தை பெரியார் சமத்துவ அணிவகுப்பில் முன் சென்றபோது அக்கேள்விகள் மனதில் எழுந்தன.

அப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணாக்கர்கள் பதாகைகள் தாங்கி முன் நடந்த காட்சியும், ஆயிரத்திற்கும் மேலான பெரியாரின் கறுப்புச் சட்டை பிள்ளைகள் அறிவியற் செய்திகள் சொன்ன கலை நிகழ்வுகள் நடத்தி வந்த காட்சியும் எழுச்சியாய் இருந் தன.

தந்தை பெரியார் சமூக நீதிக்குச் செய்த இமாலய பங்களிப்பு களை இருட்டடிப்பு செய்து காலப்போக்கில் அவர் பெயரை மங்கி விடச் செய்ய முடியு மெனக் கருதுவோ ருக்கு -அந்தப் பகலவன் மறையாத ஒளிப் பிழம்பென்ற செய்தி யுரைப்பதாய் அமைந் தது. இன்றைய இளை ஞர்களைப் பற்றி நாம் அவநம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியமில்லை -அவர் களை நாம் நம்பலாம் என்பதற்கான மறக்க முடியா நிகழ்வொன்றும் தமிழ் மையம் அமைப்பு ஏற்பாடு செய்த ""நம்ம ஈரோடு'' கலை-பண்பாட்டுத் திருவிழாவின் போது நடந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்னரேயே "நம்ம ஈரோட்டிற்கான' திட்டமிடல்கள், உரையாடல்கள் தொடங்கிவிட்ட போதும் பெரியதோர் நிகழ்வு நடத்துவதற்கான நிதி ஆதாரம் கிட்டவில்லை. ஒரு கட்டத்தில் நிகழ்வை ஒத்தி வைக்கலாம் -தற்காலிகமாகக் கைவிடலாம் என்ற நிலை வந்தபோது ஈரோட்டின் சித்தோடு பகுதியில் இயங்குகிற ஸ்ரீ அம்மன் கலை- அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் கனவில் மட்டுமே நம்மால் ஆசிக்க முடிகிற இலட்சியக் காட்சி போல் வந்தார்கள்.

சுமார் 1500 மாணாக்கர்கள் 500, 1000 என்று பங்களித்து பத்து லட்ச ரூபாய்க்கும் மேலாகத் திரட்டி "நம்ம ஈரோடு' நடத்தினார்கள். புத்தாண்டின் முதல் அற்புதம் என மகிழ்ந்து கொண்டாடி பெருமையுடன் இதனைப் பதிவு செய்கிறேன்.

வளர்ந்து விட்ட நம்மை விட இளையோரை, நாளைய பிள்ளைகளை நிச்சயம் நாம் நம்பலாம்."நம்ம ஈரோடு' கலை-பண்பாட்டு விழாவின் எதிர்பாரா வியப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சுடலைக் கண்ணன் அவர்கள் விழா அரங்கில் கிராமியத் தாலாட்டுப் பாடலொன்று பாடி அசத்தியது.

அடடா, எளிமையான-அமைதியான-பண்பான ஓர் அரசு அதிகாரிக்குள் செறிந்து கிடந்த தமிழ் அறிவும், குரல் வளமும், கலை-பண் பாட்டு உணர்வும் காண ஏற்பட்ட பரவசம் மறக்க முடியாதது.