பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, January 9, 2010

தேசிய தலைவரின் தந்தையாரின் இறுதிநிகழ்வில் யாழ். செல்லும் மகிந்த கலந்துகொள்வார்? சாவு வீட்டை தேர்தலுக்கு சாதகமாக்க திட்டம்!

தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளன.
அவரது பூதவுடல் அன்று முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வை, பூச்சிவிட்டானில் உள்ள அவரது உறவினர்களில் ஒரு வரின் வீட்டில் வைக்கப்பட்டு கிரியைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பூச்சிவிட்டான் பகுதி தீருவில் பன்னிருவர் மயானத்திற்குச் சமீபாக உள்ளது.
அமரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. யாழ். மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அமரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பெருந்திரளான மக்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சென்று தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள அரச தலைவர் மகிந்த, தேசிய தலைவரின் தந்தையாரின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்டு யாழ். மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊகம் தெரிவித்துள்ளன.
ஆனாலும், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

713 புலிகள் இயக்க முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் விடுதலை




வன்னிச் சமரின் போது ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து இவர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகம் தெரிவித்துள்ளது.



புலிகளினால் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்ட, ஆனால் பயங்கரவாதத்துடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க கூறினார்.இன்று விடுவிக்கப்படுபவர்களில், வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களிடையே 18 வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது. ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருவதோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்றவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் தயா ரத்னாயக்க கூறினார்.

இதற்கிடையில், இன்று விடுவிக்கப்படும் 713 பேரையும் இலங்கை புலனாய்வுப் பிரிவு இன்னொரு தடவை தாம் ஆராயவேண்டும் எனவும், அதற்கான ஒரு குழுவை வவுனியா அனுப்ப வேண்டும் எனவும் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு குற்றவியல் நீதிபதி சம்பக் ஜானகி ராஜரட்ன நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்படுபவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாதவர்கள் எனும்போது மீண்டும் விசாரணை செய்வதற்கு அவசியம் இருக்கிறதா என்ன? அவர் புலனாய்வாளர்களைக் கேள்வி கேட்டிருந்தார்.

Friday, January 8, 2010

பொங்கல் படங்கள்: 'வரூம்... ஆனா வராது!'

வடிவேலு படத்தில் 'வரூ..ம்... ஆனா வரா...து!' என்று என்னத்தே கண்ணையா அடிக்கடி இழுப்பாரே... அது தமிழ் சினிமாவுக்குதான் மிகச் சரியாகப் பொருந்தும்.ஒவ்வொரு விசேஷத்தின் போதும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் படங்கள் இவை என்று பெரிய பட்டியலே போடுவார்கள்.
பண்டிகை நாளின் போது அந்தப் பட்டியலில் பெரும்பாலான படங்கள் பின்வாங்கிவிட, நான்கைந்து படங்கள் தேறினாலே பெரிய விஷயமாகிவிடும். அவையும் கூட சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்காது.
இதற்கு முக்கிய காரணம், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் திட்டமிடல் என்ற விஷயமே இல்லாமலிருப்பதுதான்.
இதைச் சொன்னால், 'படைப்பாளிகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடக்காதீர்கள்' என்று டப்பா சென்டிமெண்ட் பேசுவார்கள்!சரி... இந்த பொங்கலுக்கு வரவிருப்பதாக இப்போதைக்கு பட்டியலிடப்பட்டுள்ள படங்கள் இவை:
ஆயிரத்தில் ஒருவன்
கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா நடித்து, செல்வராகவன் டைரக்டு செய்த படம். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை, ரூ.32 கோடி செலவில் ரவீந்திரன் தயாரித்து இருக்கிறார்.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாக ரீமாசென், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் வருகிறார்கள். அவர்களுக்கு உதவுகிற போர்ட்டராக கார்த்தி நடித்து இருக்கிறார். இவர்களின் அபூர்வமான 'கண்டுபிடிப்பு' பார்த்திபனாம். அது என்ன கண்டுபிடிப்பு? என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்களாம்.
குட்டிசி
ரஞ்சீவியின் அக்கா மகன் அல்லு அரவிந்த் நடித்து, ஆந்திராவில் வெற்றிபெற்ற ஆர்யா' என்ற தெலுங்கு படத்தை தழுவிய கதை இது. ஒரு கல்லூரி மாணவருக்கும், மாணவிக்கும் இடையே ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதை அவர்கள் இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கதை. தனுஷ் - ஸ்ரேயா ஜோடியாக நடிக்க, மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்க, ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
கௌபாய் பாணி படம் இது. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் சாதாரண மனிதனைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்தான் திரைக்கதை.ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமிராய், சந்தியா நடித்துள்ளனர். இம்சை அரசன் 23 ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்புதேவன் படம் என்பதால், கொஞ்சம் எதிர்பார்ப்புள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.
நாணயம்
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வந்த ஹாலிவுட் படத்தின் ஜெராக்ஸ் காப்பிதான் இந்த நாணயம்.பிரசன்னா, சிபிராஜ், ரம்யா, யாஸ்மின் நடித்து இருக்கிறார்கள். சக்தி, டைரக்டு செய்துள்ளார். கேபிட்டல் பிலிம் நிறுவனம் சார்பில் எஸ்.பி. பி.சரண் தயாரித்துள்ளார். படத்துக்கு வில்லன் சிபிராஜாம். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கும் வில்லனாகி விரட்டிவிடாமல் இருந்தால் சரி!
போர்க்களம்
பொல்லாதவன், வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களில் நடித்த கிஷோர், கதாநாயகனாக நடித்துள்ளார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கிஷோர், ஆந்திரப் பெண் ஒருவருக்கு நேரும் பிரச்சினையை ஆந்திராவுக்கே போய் எப்படித் தீர்க்கிறார் என்பது கதை. பண்டி சரோஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த ஐந்து படங்களில் இரண்டு மட்டுமே திரையரங்குகளை உறுதி செய்துள்ளன. மற்றவை 'வரூம்... ஆனா வராது' ரகம்தான். வந்தால் சந்தோஷமாகப் பாருங்கள்!

ரூ.48 கோடிக்கு சுறாவை வாங்கிய சன்!

விஜய் நடிக்கும் 50 வது படமான சுறாவை ரூ 48 கோடி கொடுத்து சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தை சமீபத்தில் சன் வெளியிட்டது. இந்தப் படத்தை வாங்கியபோதே, விஜய்யின் 50வது படமான சுறாவையும் தங்களுக்கே தரவேண்டும் என ஒப்பந்தம் போட்டது சன் என்கிறார்கள். வேட்டைக்காரன் வெளிவந்து, போதிய வரவேற்பைப் பெறாத நிலையில், சங்கிலி முருகன் தயாரித்து வரும் விஜய்யின் 50வது படத்தை முன்பு பேசிய விலையை விட குறைவான தொகைக்குத்தான் வாங்கிக் கொள்ள முடியும் என சன் கூறிவிட்டதாம்.
இந்த விஷயத்தில் ஏற்கெனவே அனுபவசாலி சங்கிலி. முன்பு விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தை அவர்தான் தயாரித்தார். படம் நன்றாக வந்திருந்தும், கொஞ்சம் ஸ்லோவாக இருப்பதாக நண்பர்கள் கூறியதால், வந்த விலைக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விற்றார்.ஆனால் ஆஸ்கர் ரவியின் நேரம், அந்தப் படம் பிளாக் பஸ்டராகி கோடிகளில் அள்ளிக் கொடுத்தது. பின்னர், வந்த லாபத்தில் சங்கிலி முருகனுக்கு ஒரு தொகையை ஆஸ்கர் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.
இப்போது, கிட்டத்தட்ட அதே பாணியில்தான் சுறாவை விற்றுள்ளார் சங்கிலி.
ஆனால் அவரைப் பொறுத்தவரை பிஸினஸ் லாபம் என்கிறார்கள். சுறாவின் கதை, மலையாளத்தில் வந்த சோட்டா மும்பை என்பதாலும், அதை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே எடுக்கப் போவது தெரிந்ததாலும்தான், தைரியமாக வாங்கியுள்ளார்களாம் சன். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, உலக உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் (perpetual rights) ஒட்டு மொத்தமாக சன்னுக்கு கொடுத்துள்ளார் சங்கிலி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜக்குபாயை கொன்னுட்டாங்க...!'' -நடிகை கதறல்!



""மாப்ளே... ஜக்குபாய் எப்படி இருந்துச்சு?

''""ஜக்குபாய் வெரி பிக் பாய்.''""


இது அந்தப் படத்துல கவுண்டமணி பேசுற டயலாக்ல...'


'-"ஹேப்பி நியூ இயர்' நள்ளிரவில் பீரை நுரை தள்ளிக்கொண்டாடிய நண்பர்கள் மறுநாள் "பார்த்த சங்கதி'யை ஒருவருக் கொருவர் பகிர்ந்துகொள்ள... அந்த டீமில் ஒருவருக்கு ஒன்றும் புரியவில்லை. நண்பர்கள் விளக்கினார் கள்.


""அதான் நெட்ல 30-ந் தேதியே ஜக்கு பாய் ரிலீசாயிருச்சுல்ல. டி.வி.டி.கூட மார்க் கெட்டுக்கு வந்துருச்சுல்ல...'' என்று சிரித்தார் கள்.


நண்பர்கள் நம்பவில்லை.""அய்யய்ய... நம்பமாட்டியாடா நீ? கதையைச் சொல்றேன் கேட்டுக்க.


சரத் ஒரு ஐ.பி.எஸ். ஆபீஸர். இந்தியாவுல அவரு பேரு ஜெகன்னாதன். ஆஸ்திரேலியாவுல ஜக்குபாய். சரத்துக்கு மகளா வர்றாங்க ஸ்ரேயா. படம் முழுக்க கத்திக் கத்திப் பேசுற பழைய கவுண்டமணி வர்றாரு. அவரு மேக்கப்பும் ஹேர் ஸ்டைலும் சகிக்கல.


அவருகூட பெரிய போலீஸ் ஆபீசருதான். ஜோக்கா இருக்குல்ல. கவுண்டமணி அடிக்குற லூட்டியப் பார்த்துட்டு அந்தப் படத்துல வர்ற ஒரு கேரக்டர் "இவன் திருந்தவே மாட்டானா? ட்ரண்ட மாத்திக்கவே மாட்டானா?'ன்னு கலாய்க்குற மாதிரி ஸீனெல்லாம் இருக்கு. முறைப்படி ரிலீசாகுறதுக்கு முன்னாலயே எவனோ ஜக்குபாய் முழுப்படத்தையும் லேப்லயிருந்து சுட்டிருக்கான். அத யாரோ ஒருத்தன் நெட்ல ஏத்திவிட்டிருக்கான். இதுக்கும் காரணம் இல்லாமலா இருக்கும்?'' என கவுண்டமணி பாணியிலேயே அவர்களும் சத்தமாகப் பேசினர்.
2010 பிறக்கும்போதே தமிழ் டொரண்ட் . நெட் நேயர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அவ்வலைத் தளத்தில் விரிந்தது ஜக்குபாய். இச்சேவையைச் செய்த அந்தப் "புண்ணியவான்' தன் பெயரை த்லோகா என்று பதிவு செய்திருந்தான். இதை டொரண்ட் ஃபைலாகவும், அதை உபயோகிக்கத் தெரியாதவர்களும் ஆன்லைனிலேயே ஸ்ட்ரீமிங் வீடியோவாகவே பார்க்கவும் வசதியாக ஏற்பாடு செய்திருந்தான்.
சுமார் இரண்டரை மணி நேரம் ஓடும் ஜக்குபாயின் கதைக்களம் ஆஸ்திரேலியா. போலீஸ் அதிகாரியான சரத்குமார் கடமைக்காக தன் காதல் மனைவியையே இழக்கிறார். பிறகு தன்னை அப்பா என்றறியாத மகள் ஸ்ரேயாவோடு பாசப் போராட்டம் நடத்துகிறார்.
கடத்தல்காரனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் வில்லனை க்ளைமாக்ஸில் ஹெலிகாப்டரில் பறந்து கொன்றுவிடுகிறார் சரத்குமார். நிஜத்திலோ... ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்பே, ஆதாயத்துக்காக ஜக்கு பாயை வலைத்தளம் வரை கடத்திய நிஜ வில்லனால் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது அந்த சினிமா டீம்.ரிலீசுக்கு மறுநாள் தியேட்டர் பிரிண்ட்டாக திருட்டு வி.சி.டி. வருவதெல்லாம் வழக்கத்தில் உள்ளதுதான். ரிலீசுக்கு முதல்நாள் கள்ளச்சந்தையில் "ஜீன்ஸ்' வெளியானபோது அப்போது திரையுலகமே கொந் தளித்தது. ஜக்குபாய் விவகாரம் அப்படியல்ல. டப்பிங், எடிட்டிங்கெல்லாம் முடிந்து ரீ-ரிக்கார்டிங்கில் பண்ணாத இ.எப்.எக்ஸ். பிரதியை கொஞ்சம் கொஞ்சமாக எட்டு பாகமாகத் திருடி, முன்கூட்டியே வெளியிட்டுவிட்டார்கள். ஜக்குபாய் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் பேசினோம்.""எடிட்டிங்கே முடியாத, முழுமை யில்லாத வெர்ஷன் அது. ரிலீஸ் தேதிகூட இன்னும் ஃபிக்ஸ் பண்ணல.
அதுக்குள்ள வெளியேத்திட்டாங்க. இது புகாராகி, சி.எம். உத்தரவு போட்டு பெரிய அளவுல இன்வெஸ்டிகேஷன் நடந்துகிட்டிருக்கு. யாரு இத பண்ணுனாங்கன்னு ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் தெரியும். ஒரு வருஷம் ஒர்க் பண்ணுன படம். என்னோட ஜக்குபாய அநியாயமா கொன்னுட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. டப்பிங், எடிட்டிங், ரீ-ரிக்கார்டிங்ன்னு ஒவ்வொரு இடமா தூக்கிட்டுப் போற தொழில் இது. இப்ப யாரை நம்புறதுன்னு தெரியல.'' -ரொம்பவும் நொந்துபோய் சொன்னார்.
இன்னொருபுறம் ""முதல்ல 5 கோடி ரூபாய ஜீ.டி.வி.காரங்ககிட்ட வாங்கித்தான் இந்தப் படத்த தயாரிக்க ஆரம்பிச்சாங்க ராதிகா. அப்புறம் படத்த முடிச்சிட்டு செலவானது 17 கோடி... இன்னும் 12 கோடிய செட்டில் பண்ணுங்கன்னு கேட்டிருக் காங்க. ஜீ.டி.வி. தரப்பிலோ "சரத்குமார் பட மெல்லாம் 17 கோடி ரூபாய்க்கு எப்படி போணி ஆகும்? 5கோடி போனாலும் போகட் டும் ஆள விடு'ன்னு ராதிகாவ நோஸ்கட் பண்ணிட்டாங்க. இந்த சண்டையாலதான் அதுவரைக்கும் பேப்பர்ல வந்துக்கிட்டிருந்த ஜக்குபாய் விளம்பரம்கூட நின்னுபோச்சு.
இதுல ஏதாச்சும் ஒரு பின்னணிலகூட இந்த குற்றம் நடந்திருக்கலாம்'' என்று சந்தேகம் கிளப்புகிறார்கள். ஜக்குபாய் தயாரிப்பாளர் ராதிகாவை தொடர்புகொண்டோம்.""ஜீ.டி.வி.காரங்க பிரச்சினை, அது தனியா போய்க்கிட்டிருக்கு. மியூசிக் இல்லாம, சரியா டப்பிங் இல்லாம ஜக்குபாயை திருட்டுத்தனமா வெளியேத்தி சினிமா தொழிலுக்கே பெரிய துரோகம் பண்ணிட்டாங்க. தவறு எங்கே நடந்துச்சுன்னு இப்ப கண்டுபிடிச்சாச்சு'' என்றார் கொதிப்புடன்.விதவிதமான திருட்டுக்களால் திணறிக்கொண் டிருக்கிறது திரையுலகம்.

சாதிகளை ஒழித்த தலைவன்! - ஜெகத் கஸ்பர்


நாட்பட, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எனக்கு ஆழ்ந்த ஈர்ப்பும், ஈடுபாடும் வரக் காரணம் போர்க்கள வெற்றிகளின் சிலிர்ப்போ, ஆயுதப் போராட்டத்தின் உள்மனம் சார்ந்த கேள்விக் குரிய கவர்ச்சிகளோ அல்ல.

சமூகக் களத்தில் அது ஏற்படுத்தி வந்த தாக் கங்களும், புதிய பரிமளிப்புகளும் -அவை தந்த புதிய நம்பிக்கைகளுமே முக்கிய காரணங்கள்.

குறிப்பிட்டுச் சொல்வதானால் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை இரண்டையும் கூறலாம்.சாதி இரண்டொழிய வேறில்லை -இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் என்றெல்லாம் இன்றும் மேடைகளில் நன்றாகத்தான் பேசுகிறோம்.

ஆனால் திரும்பும் திசையெங்கும் தெரிகிற சாதீயத்தின் திரைமறை வக்கிரங்கள் தமிழ் இனத்தின் சமூக மரபணுவை ஆழப் பீடித்துவிட்ட புற்றுநோய் என்றும், அதை குணப்படுத்துதல் எளிதல்ல என்றும் அறிவுசார், முடிவு செய்திருந்த காலத்தின்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமும்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் புதிய நம்பிக்கையின் ஒளிச்சிதறல்களைத் தந்தன.

பொதுவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சாதி பேதம் பார்க்கப்படுவதில்லை யென்பதும், எந்தப் படிவங்களிலும் ஒருவரது சாதி பதிவு செய்யப்படுவதில்லையென்பதும், போராளி கள் தங்களுக்குள் ஒருவரது சாதி பற்றி அறிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லையென் பது மட்டுமல்ல -அதுபற்றின பிரக்ஞைகளே இல்லாதிருந்தார்களென்பதும் நீண்ட ஆய்வுகள் மூலம் எமது வேரித்தாஸ் வானொலி கண்டெடுத்த முடிவுகள்.

இத்துணைக்கும் வரலாற்று ரீதியாக ஈழத் தமிழ்ச் சமூகம் குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகம் கெட்டியான சாதீயப் படிநிலைகள் கொண்டதொன்றாகவே இருந்து வந்திருக்கிறது. சமூக-பொருளாதார- பண்பாட்டு- கல்வி வெளிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை மிகவும் பின்தங்கியதாகவே மிக நீண்ட காலம் இருந்துள்ளது. இந் நிலையை தமிழீழ விடுதலை இயக்கம் -முழக்கங்களும், பிர கடனங்களும் செய்யாமல் தன் இயல்பான இயங்கி யல் ஓட்டத்திலேயே இடைமறித்திருக்கிற தென்பது எதிர்காலத்தின் சமூகமானுடவியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகளால் வியப்புடன் போற்றப்படப் போகும் மகத்துவம் கொண்ட உண்மைகளில் ஒன்று.

ஈழத்து நண்பர் ஒருவர் உரையாடலின் போது கூறிச் சென்றதொரு நிகழ்வு -ஊர் விபரம் மறந்து விட்டேன்... சாவகச்சேரிக்குப் பக்கம் என்பதாக நினைவு... தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் எடுக்கும் கிணற்றில் உயர் சாதியினர் மலம் அள்ளிப் போட... முதலில் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் நேரிற் சென்று பேசி செய்தவர்களை மன்னிப்புக் கேட்க வைத்து -இனிமேல் ஒருபோதும் அவ்வாறு நடக்காதென்ற உறுதியையும் ஊராரிடமிருந்து பெற்று வந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த நாள் மீண்டும் அவ் உயர்சாதியினர் மலம் அள்ளிக் குடிநீர் கிணற்றில் போட, குற்றவாளிகளை அழைத்து வந்து அக்கிணற்றடியிலேயே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

நான் தீவிர மரண தண்டனை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவன். அதுபோலவே முறைப்படியான நீதி விசாரணைகள் நடத்தப்படாமல், குற்றவாளி தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க வாய்ப்புத் தரப்படாமல் தண்டனை வழங்கப்படுவதிலும் உடன்பாடில்லை.

ஆயினும் சக மனிதருக்கான குடிநீரில் மலம் அள்ளிப் போட முடிகிறவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது, அவர்களை மனிதர்களாக நாம் மதிக்க வேண்டிய தேவையும் இல்லை. எனவே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது சரியே என்று அக்கணத்தில் என் மனதிடை ஓடிய எண்ணம் நினைவுக்கு வருகிறது.

அந்த நண்பர் தொடர்ந்தும் குறிப்பிட்டார், மேலே விவரித்த அந்த நிகழ்வுக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உயர் சாதியினரின் வெளிப்படையான சமூக வன்கொடுமைகள் நின்று விட்ட தென்று.விடுதலைப் போராட்ட இயக்கத்திற்குள் திருமணங்கள் ஆணும்- பெண்ணும் இணைகிற மிக இயல்பான நிகழ்வுகளாகவே இருந் திருக்கின்றன.

சாதி பார்க்கிறவர்களை இயக்கத்தை விட்டே வெளியேற்றுகிற ஒழுக்க நடைமுறையை கொண்டிருந்திருக்கிறார்கள். தங்களது ஆளுகைப் பரப்பில் ""தமிழ்மொழி தான் நமது தேசிய அடையாளம் -அதனைக் கடந்த ஒன்றாக நிச்சயம் சாதி இருக்கக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்திருக்கிறார்கள்.உண்மையில் தமிழகத்தில் -இந்தியாவில் சமூக நீதிப் பேரியக்கம் எப்படி எல்லா சமூக மக்களும் அரசியல் -அரசு நிலைகளில் பங்கேற்கிற நிலையை உருவாக்கியதோ அவ்வாறே ஈழத்தில் விடுதலைப் போராட்ட இயக்கம் அதனை சாத்தியப்படுத்தியிருந்திருக்கிறது. விடுதலைப் போராட்ட வீரர்களின் சாதி- சமூக அடையாளங்களைப் பற்றிப் பேசுவதே குறையுடைத்த செயல். எனினும் மேற்குறிப்பிட்ட உண்மையை வலுப்படுத்த வேண்டி இதனைச் சொல்ல நேரிடுகிறது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவரென்பதும், தமிழ்ச்செல்வன், நடேசன் போன்ற முக்கிய தலைவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத் தவர்களென்பதும் இவர்களையும் சூசை போன்ற இன்னபிற தளபதியர்களையெல்லாம் ஈழத்து உயர் சாதியினரான வேளாள மக்களில் மிகப் பெருவாரியானோர் தங்களின் வரலாற்று நாயகர்களாக ஏற்றுப் போற்றி மதித்து வணங்கினார்களென்பதும் சாதி மனநிலையை (Caste Consciousness) அல்லது சாதிய மனநிலை வெளியை சுருக்குவதில் விடுதலைப் போராட்டம் சாதித்த மிகப்பெரும் வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.விடுதலைப் போராட்டம் பின்னடைவு கண்டு நிற்கிற இக்கால கட்டத்தில், போராட்டம் சாதித்த பெருமைமிகு சமூக வெற்றிகள் தொடர்ந்து நிலைபெறச் செய்யப்படுமா என்ற கேள்விகள் கவலையோடு எழுகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை "சென்னை சங்கமம்' போல் ஈரோடு மக்கள் கொண்டாடிய ""நம்ம ஈரோடு-கூடல் 2010'' நிறைவு நாளில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைப் போற்றி ""பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற முழக்கத்தோடு நடந்த தந்தை பெரியார் சமத்துவ அணிவகுப்பில் முன் சென்றபோது அக்கேள்விகள் மனதில் எழுந்தன.

அப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணாக்கர்கள் பதாகைகள் தாங்கி முன் நடந்த காட்சியும், ஆயிரத்திற்கும் மேலான பெரியாரின் கறுப்புச் சட்டை பிள்ளைகள் அறிவியற் செய்திகள் சொன்ன கலை நிகழ்வுகள் நடத்தி வந்த காட்சியும் எழுச்சியாய் இருந் தன.

தந்தை பெரியார் சமூக நீதிக்குச் செய்த இமாலய பங்களிப்பு களை இருட்டடிப்பு செய்து காலப்போக்கில் அவர் பெயரை மங்கி விடச் செய்ய முடியு மெனக் கருதுவோ ருக்கு -அந்தப் பகலவன் மறையாத ஒளிப் பிழம்பென்ற செய்தி யுரைப்பதாய் அமைந் தது. இன்றைய இளை ஞர்களைப் பற்றி நாம் அவநம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியமில்லை -அவர் களை நாம் நம்பலாம் என்பதற்கான மறக்க முடியா நிகழ்வொன்றும் தமிழ் மையம் அமைப்பு ஏற்பாடு செய்த ""நம்ம ஈரோடு'' கலை-பண்பாட்டுத் திருவிழாவின் போது நடந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்னரேயே "நம்ம ஈரோட்டிற்கான' திட்டமிடல்கள், உரையாடல்கள் தொடங்கிவிட்ட போதும் பெரியதோர் நிகழ்வு நடத்துவதற்கான நிதி ஆதாரம் கிட்டவில்லை. ஒரு கட்டத்தில் நிகழ்வை ஒத்தி வைக்கலாம் -தற்காலிகமாகக் கைவிடலாம் என்ற நிலை வந்தபோது ஈரோட்டின் சித்தோடு பகுதியில் இயங்குகிற ஸ்ரீ அம்மன் கலை- அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் கனவில் மட்டுமே நம்மால் ஆசிக்க முடிகிற இலட்சியக் காட்சி போல் வந்தார்கள்.

சுமார் 1500 மாணாக்கர்கள் 500, 1000 என்று பங்களித்து பத்து லட்ச ரூபாய்க்கும் மேலாகத் திரட்டி "நம்ம ஈரோடு' நடத்தினார்கள். புத்தாண்டின் முதல் அற்புதம் என மகிழ்ந்து கொண்டாடி பெருமையுடன் இதனைப் பதிவு செய்கிறேன்.

வளர்ந்து விட்ட நம்மை விட இளையோரை, நாளைய பிள்ளைகளை நிச்சயம் நாம் நம்பலாம்."நம்ம ஈரோடு' கலை-பண்பாட்டு விழாவின் எதிர்பாரா வியப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சுடலைக் கண்ணன் அவர்கள் விழா அரங்கில் கிராமியத் தாலாட்டுப் பாடலொன்று பாடி அசத்தியது.

அடடா, எளிமையான-அமைதியான-பண்பான ஓர் அரசு அதிகாரிக்குள் செறிந்து கிடந்த தமிழ் அறிவும், குரல் வளமும், கலை-பண் பாட்டு உணர்வும் காண ஏற்பட்ட பரவசம் மறக்க முடியாதது.

என் பவர் மிரட்டும் நீலப்பட சாமியார்!

""வேலை கேட்டுப்போன என்னை மயங்க வைத்து... கற்பழித்ததோடு... ஆபாசப் படம் எடுத்தும்.. சீரழித்து வருகிறார்''’என சாமியார் ஈஸ்வர ஸ்ரீ குமார் மீதான அதிரடிப் புகாரோடு ஹேமலதா என்ற பெண்மணி நக்கீரனை நாடி வந்ததையும்...


இரு தரப்பின் வாக்குமூலத்தையும்... சாமியார் போலீஸில் ஆஜராகாமல் சில போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் நழுவி வந்ததையும் உடனுக்குடன் நாம் ரிப்போர்ட்டாகத் தந்து வந்தோம். இந்த நிலையில் தனது உதவியாளர் மூலம் சாமியார் ஈஸ்வர குமார் தனது விளக்கத்தை எழுதி அனுப்ப... அதை ஏற்க மறுத்து... நேரில் ஆஜராகியே தீரவேண்டும் என கறாராய் உத்தரவிட்டது காவல்துறை.

இதைத் தொடர்ந்து சாமியார் திடீரென எஸ்கேப் ஆக... இவரைப் பிடிக்க டி.சி.சம்பத்குமார் ஸ்பெஷல் டீம் ஒன்றை அமைத்தார்.

இந்த டீம் சாமியாரின் மனைவிக்கும் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் வருகிற செல்போன்களை எல்லாம் ட்ரேஸ் பண்ண ஆரம்பிக்க... உஷாரான சாமியார் தனது செல்போன்களை ஆஃப் செய்துவைத்து போலீஸுடன் கண்ணாமூச்சு ஆடினார். சாமியாரின் மனைவிக்கு கர்நாடகாவில் இருக்கும் மந்திரா லயத்திலிருந்தும் பெங்களூரில் இருந்தும் இடையில் இரண்டு மூன்று கால்கள் மட்டும்வர.. அவர் கர்நாடகாவில்தான் பதுங்கி இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.

எந்த வகையிலாவது சாமியார் தன் வீட்டைத் தொடர்புகொண்டே தீருவார் என கணித்த காவல்துறை மப்டியில் அவர் வீட்டைச் சுற்றி ஆட்களை நிறுத்தியது.இந்த நிலையில்... பல வி.ஐ.பி.க்களுக்கு பவர் புள்ளியாக இருப்பதாலும் பல வழக்குகளில் தான் சம்பந்தப்பட்டிருப்பதாலும் தன் வீட்டில் இருக்கும் ஃபைல்களை எல்லாம் பெங்களூருக்குக் கொண்டுபோகும் முடிவிற்கு வந்தார் சாமியார். இதன்படி அவரது டிரைவர் ஒரு இரவில் பாதி ஃபைல்களை அள்ளிச்செல்ல..

இதைத் தாமதமாக அறிந்த காவல்துறை... மேலும் ஆட்களை நிறுத்தி உஷார்படுத்தியது. பெங்களூரில் சர்வீஸ் அபார்ட்மெண்டில் பதுங்கியிருந்த சாமியார் இடைப்பட்ட காலத்தில்... போலீஸுக்கு பயந்து மூன்றுமுறை இடம் மாறியிருந்தார்.

இந்த நிலையில் 4-ந் தேதி இரவு மிச்ச ஃபைல்களை அள்ளிச்செல்ல... சாமியார் தன் டிரைவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்ப... டிரைவரை சைலண்டாக மடக்கி... பெங்களூர் தூக்கிச்சென்றனர் காக்கிகள். 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அபார்ட்மெண்ட் கதவை காக்கிகள் தட்ட.. டிரைவர்தான் என அசால்ட்டாக கதவைத்திறந்த சாமியார் அதிர்ந்தார். அவரை போலீஸ் டீம் காரில் ஏற்ற... அந்த நிலையிலும் சாமியார் “""என் பவர் தெரியாம என்மேல் கை வைக்கிறீங்க. நான் மதிய லஞ்ச்சை ஐ.ஜி.யோடும் நைட் டின்னரை ஏ.டி.ஜி.பியோடும் சாப்பிடறவன். ரொம்ப வருத்தப்படப் போறீங்க''’’ என தெனாவெட்டாக மிரட்ட... கொஞ்சமும் சளைக்காமல் அவரை சென்னைக்குக் கொண்டுவந்துவிட்டது ஸ்பெஷல் டீம்.

அவரை ரிமாண்டுக்கு கொண்டு செல்லும்வரை ""நான் சங்கரமடத்துக்கு நெருக்கமானவன். இதுவரை எந்த வழக்கிலும் என்னிடம் போலீஸ் இப்படி நடந்துகொள்ளவில்லை. என் பவரைக் காட்டினாத்தான் சரிப்படுவீங்க''’’ என காக்கிகளை எச்சரித்தபடியே இருந்தார். விசாரணைக்கு ரெடியான அதிகாரிகளோ... ""விசாரணையில் சாமியார் தொடர்பான மேலும் பல விவகாரங் கள் வெளியே வரும்'' என் கிறார்கள் அழுத்தமாய்.

ரஜினியின் 2வது மருமகன்


ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுகிறது. கட்டுமான நிறுவனத்தின் அதிபர் மகனை அவர் மணந்து கொள்கிறார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.அவர் திரைப்பட நடிகர் தனுசை மணந்து கொண்டார்.
ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யா ஆக்கர் ஸ்டுடியோ என்னும் பெயரில் அனிமேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரஜினியை மையமாக கொண்ட சுல்தான் தி வாரியர் என்னும் அனி மேஷன் படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா படத்தை யும் அவர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தனது 2வது மகள் சௌந்தர்யாவுக்கு திருமணம் செய்ய ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். படம் முடியவுள்ள நிலையில் அவர் தனது மகள் திருமணத்தை பேசி முடித்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன அதிபர் ராம்குமார் என்பவரின் மகன் அஸ்வினுக்கும், ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும் திருமணம் பேசப்பட்டிருப்பதாக இரு குடும்பத்திற்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஸ்வின் பொறியியல் படிப்பை முடித்து பின்னர் அமெரிக்காவில் மேற் படிப்பு படித்தவர். தற்போது தனதுதந்தை நிறுவனத்தில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். சௌந்தர்யாஅஸ்வின் திருமணம் அடுத்த மாதம் 14ந் தேதி நடை பெறலாம் என்று கூறப்படுகிறது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பந்தம் இருதரப்பினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி யிருப்பதாகவும் தெரிகிறது.

Thursday, January 7, 2010

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை காலமானார்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார். இராணுவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
இது ஒரு இயற்கை மரணம் என்றும் அந்த தரப்பு குறிப்பிட்டுள்ளது.
வேலுப்பிள்ளை, கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருடன், பிரபாகரனின் தாயும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

Wednesday, January 6, 2010

சிங்களவருக்கு மட்டுமே நாடு சொந்தம் என்று கூறவில்லை: சரத் பகிரங்க அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ,நாடு சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என எந்தவொரு வெளி நாட்டு ஊடகத்திற்கும் தான் தெரிவிக்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று மாலை மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம். முபீன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ள அவர் தான் தெரிவித்த கருத்து அந்த ஊடகத்தில் திரிபுபடுத்தப்டப்டிருந்ததாகவும் கூறினார்.
“இலங்கையில் வாழும் சகல இனங்களுக்கும் நாடு சொந்தமானது என்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன்” என்றும் தனது உரையில் குறிப்பிட்ட அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமாதானமாகவும், சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும் .இதனைத் தான் அரசியல் யாப்பும் உறுதிப்படுத்துகின்றது.
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பு, வடக்கு கிழக்கு மக்கள் ஏனைய மக்கள் போல சம அந்தஸ்துடன் வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உண்டு. அதாவது சிறுபான்மை மக்களின் பாதுகாப்பினையும் உரிமையையும் உறுதிப்படுத்துவது” என்றும் குறிப்பிட்டார்.
1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை,குருக்கள் மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை போன்ற சம்பவங்களையும் தனது உரையில் நினைவுபடுத்திய ஜெனரல் சரத் பொன்சேகா தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.
குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஹஜ் யாத்திரிகர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் பின் கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட, பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கல்முனை செல்லும் வழியில் ஆரையம்பதி கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டிலும் இவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலய முன்றலில் கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளை அசைத்து தமது ஆதரவை வெளிப்படுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது.

இன்று முதல் ஏ9 பாதையில் 24 மணிநேரம் பயணிக்கலாம்

இன்று நள்ளிரவு முதல் ஏ9 ஊடாக வீதித் தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். இதன்படி இன்று நள்ளிரவு முதல் சகல வாகனங்களும் பொதுமக்களும் எவ்வித அனுமதியும் பெறாமல் 24 மணி நேரமும் ஏ9 வீதியூடாக பயணங்களை மேற்கொள்ளலாம் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தல் வந்ததால் இவ்வளவும் கடுகதிவேகமாக நடக்கிறது, ஆனால் இவை அனைத்தும் நிலைக்குமா என்பதே தற்போது பெரும் கேள்வியாக இருக்கிறது.

Sunday, January 3, 2010

பிரபாகரன்! மதிவதினி! இசைப்பிரியா! -நேரில் கண்ட அறிவரசனின் நினைவலைகள்!

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமிலிருந்த புலிகளின் பெண் போராளியும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியாவை, ராணுவத்தினர் கடத்திக் கொண்டு போய் கொடூரமாகப் படுகொலை செய்திருப்பதை

"அய்யோ... தங்கச்சி! கதறும் ஈழ அண்ணன்' என்கிற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்த செய்தி, தமிழகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நக்கீரனை தொடர்பு கொண்டு நிறைய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர் புலம்பெயர்ந்த தமிழர்கள்.
இந்த சூழலில், நெல்லை யைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் கிளிநொச்சியில் 2 வருடம் தமிழ்ப்பணி செய்தவர். இசைப்பிரியாவையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார் என்கிற தகவல்களை பகிர்ந்து கொண் டனர் ஈழ ஆதரவாளர்கள்.

பேராசிரியர் அறிவரசனை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, ""நெல்லை கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து 1996-ல் ஓய்வு பெற்றுவிட்டேன்.

தமிழ்ப் பணி மட் டுமே என் மூச்சு!என்னுடைய தமிழ்ப்பணி பற்றி போராளிகள் அறிந் திருந்தனர். 2006-ல் அவர்களிட மிருந்து "தமிழீழத்தில் தமிழ்ப்பணி செய்ய இயலுமா? விருப்பம் இருப்பின் இங்கு வர இயலுமா அய்யா?' என்று எனக்கு அழைப்பு வந்தது.

அப்போது யுத்த நிறுத்தம் அமலில் இருந்த காலகட்டம்.அவர்களின் அழைப்பை ஏற்று, முறைப்படி விசா பெற்று 2006 மார்ச்சில் கிளிநொச்சிக்குச் சென்றேன். தமிழீழத்தின் கல்வித்துறை பொறுப் பாளர்கள், "அய்யா, இங்குள்ள தமிழாசிரியர்களை தகுதியுள்ளவர் களாக உருவாக்க வேண்டும். அப்படி தமிழாசிரியர்களாக உருவாக்க 40 பேரை தேர்ந்தெடுத்துள்ளோம்.

அவர்களுக்கு பயிற்சியளித்து, தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்க வேண்டும்' என்றனர்.மேலும், "இதற்கான பாடத் திட்டங்களையும் நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பணி முடிய எவ்வளவு நாட்கள் ஆகும்?' என்றனர்.

நான், "இரண்டு ஆண்டுகள் ஆகும்' என்றேன்.உடனே அவர்கள் "இரண்டு ஆண்டுகள் பணி செய்ய இயலுமா அய்யா' என்று கேட்க, "எனக்கு முழு சம்மதம்' என்று கூறி ஒப்புக் கொண்டேன்.



எனக்கான அனைத்து வசதிகளையும் பொறுப்பாளர்கள் பார்த்துக் கொண்டனர். அங்கு பணி செய்த இரண்டாண்டுகளும் எந்த குறையும் எனக்கில்லை.40 பேருக்கும் தமிழ் பயிற்சி கொடுத்து ஆசிரியர்களாக உரு வாக்கினேன். 40 பேருமே தேர்ச்சி பெற்றனர்.

சங்ககால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் ஆரம்பித்து அனைத்து இலக்கண பயிற்சியும் அவர்களுக்குத் தரப்பட்டது. தவிர... பிறமொழி கலப்பில்லாமல் பேசும் பயிற்சி, எழுதும் பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தனர்.இந்தத் தமிழ்ப் பணிக்காகத்தான் நான் அழைக்கப்பட்டிருந்தேன். இந்த பணிக் காலத்தில் ஒருநாள், இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் 8 மாணவிகளும் பயிற்சிக் கூடத்திற்கு வந்தனர்.

"சில பயிற்சிகளை கற்றுக் கொள்ள விரும்புகிறோம் அய்யா' என்றனர்.அந்த வகையில் தமிழின் அடிப்படை இலக்கணம் குறித்து 8 மாதங்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டனர் அவர்கள்.

தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் மதிவதனி. எந்த ஒரு பயிற்சியை கொடுத்தாலும் மற்ற மாணவிகளை விட முதன்முதலாக பயிற்சியை முடித்து "சரியாகச் செய்திருக்கிறேனா அய்யா' என்று ஓடோடி வந்து நோட்டுகளை காட்டுவார் மதிவதனி.

உலகத் தமிழர்கள் போற்றும் ஒரு மாமனிதரின் மனைவிக்கு தமிழ்ப் பயிற்சி கொடுத்தேன் என்பதில் எனக்கு பெரு மிதம் உண்டு.

மாலை 7 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே புலிகளின் "தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி' ஒலிபரப்பு செய் யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல்.

மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன்.துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அதனால், அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக் காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது, இசைப்பிரியாவை சந்தித்தேன்.அப்போது அவரிடம், ""இசை சரி... பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே...' என்றேன். அதற்கு அவர், "இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர். ஆனால் இசைப்பிரியா... இசைப்பிரியா... என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்ததால், அதுவே நிலைத்துவிட்டது' என்றார்.இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர்.
ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக் காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரிய மாகவும் இருந்தது.
துடிப்பான அந்த இளம்பெண், ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன்'' என்றார் அறிவரசன்.அவரிடம், ""பிரபாகரனை சந்தித்தீர்களா?'' என்று கேட்டபோது, ""தமிழ்ப்பணிக்காக கிளிநொச்சியில் இருந்த 2 வருட காலத்தில் 2 முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பணியை துவக்கிய காலகட்டத்தில் முதன்முறையாக பிரபாகரனை நான் சந்தித்தபோது மிகுந்த கம்பீரமாகவும் இயல்பாகவும் இருந்தார்.என்னிடம், "உங்களுக்கான வசதிகள் எல்லாம் சரியாக இருக்கிறதா அய்யா. ஏதேனும் வசதி குறைவாக

இருந்தாலோ பிரச்சனைகள் இருந்தாலோ தாராளமாக என்னிடம் சொல்லுங்கள்' என்றார். மன நிறைவாக இருக்கிறது என்று கூறினேன்.நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதால் மொழியைப் பற்றி மட்டுமே என்னிடம் பேசினார். மொழியின் வளர்ச்சி குறித்தும் மொழியைப் பாதுகாப்பது குறித்தும் பேசிய பிரபாகரன், "யுனெஸ்கோ நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் 50 ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்த் துள்ளனர்.எதனை கண்டு அழியும் மொழியில் தமிழைச் சேர்த்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இங்கு வந்து பார்த்திருப்பார்களாயின் அப்படி கூறியிருக்கமாட்டார்கள்.

தமிழீழம் கிடைத்துவிட்டால், தமிழை பாதுகாக்கவும் வளர்ச்சிக்காகவும் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். தமிழை அழியவிட மாட்டோம்' என்றார். மொழி மீது அவருக்கிருந்த பற்று புரிந்தது.இப்படிச் சொன்னவர் சட்டென்று, "என் பெயர் (பிரபாகரன்) தமிழ்தானே அய்யா?' என்றார்.

நான் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ "எனக்கு கரிகாலன்னு ஒரு பெயர் உண்டு. கரிகாலன் தமிழ் பெயர்தானே?' என்றார்.

உடனே நான், "மிக அழகான சரியான தமிழ்ப்பெயர்' என்றேன். மகிழ்ந்து சிரித்தார். "உங்களின் தமிழ்ப் பணி எங்களை நெகிழ வைக்கிறது' என்று கூறி அனுப்பி வைத்தார் பிரபாகரன்.

இதற்கு பிறகு, 2008 மார்ச்சில் என் பணியை நிறைவு செய்துவிட்டு கிளிநொச்சியிலிருந்து தமிழகத்திற்கு புறப்பட வேண்டிய நாளில், விடைபெற்றுச் செல்வதற்காக அவரை சந்தித்தேன்.

சிங்கள அரசு யுத்தத்தை துவக்கியிருந்த நேரம் அது.அந்த சூழலிலும் முகம் மலர்ந்து பேசிய அவர், "அய்யா வந்து எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன?' என்றார். "சரியாக இரண்டு வருடம்' என்றேன். "அப்பா... இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டனவா?' என்று ஆச்சரியப்பட்டார்.

"தமிழீழம் மலர்ந்தால் நீங்களெல்லாம் இங்கு வந்து தமிழ்ப்பணி செய்ய வேண்டும் அய்யா' என்று கூறி வழி அனுப்பி வைத்தார் பிரபாகரன்.கிளிநொச்சியில் இரண்டு வருடம் தமிழ்ப்பணி செய்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்.

அந்த 2 வருடங்கள்தான் என் தமிழ்ப்பணியில் மறக்க முடியாத நாட்கள். அங்குதான் தமிழ் வாழ்கிறது'' என்றார் பேராசிரியர் அறிவரசன்.