பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 26, 2009

முகாமில் 12,000 விடுதலைப் புலிகள்-இலங்கை ராணுவம்

வன்னி முகாமில் பதுங்கியிருந்த 12 ஆயிரம் விடுதலைப்புலிகளை கண்டு பிடித்துள்ளோம் என்று இலங்கை ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இலங்கை ராணுவ அதிகாரி பிரிகேடியர் தம்மிகா வீர சேகரா கொழும்புவில் நிருபர்களிடம் கூறியதாவது: வவுனியா அருகே உள்ள வன்னி முகாமில் விடுதலைப்புலிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து எதிர் அணியினர் தெரிவித்த அங்க அடையாளங்கள் மூலமாகவும், உளவியல் ரீதியாக ஆராய்ந்தும் 12 ஆயிரம் விடுதலைப்புலிகளை கண்டு பிடித்துள்ளோம். அவர்களில் 6,894 பேர் ஆண்கள், 2,098 பேர் பெண்கள்.
இவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயக பாதைக்கு திரும்பும் வகையில் ஆலோசனைகள் (கவுன்சிலிங்) வழங்கிவருகிறோம். இது அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
போரின் போது உடல் உறுப்புகளை இழந்த, ஊனமுற்ற விடுதலைப்புலிகளின் மறுவாழ்வு குறித்து ராணுவம் சிறப்பு கவனம் மேற்கொண்டுள்ளது. உடல் ஊனமுற்ற 1420 பேருக்கு மறுவாழ்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.உடல் ஊனமுற்றவர்களில் 413 பேர் ஒருகால் இழந்தவர்கள்.
71 பேர் ஒரு கை இழந்தவர்கள்.
13 பேர் காது கேளாதவர்கள்.
41 பேர் பாதி நிலையில் காது கேளாதவர்களாகவும், 11 பேர் கண்பார்வை பரிபோன வர்களாகவும் உள்ளனர். இவர்கள் தவிர 156 பேர் பாதி கண் பார்வையற்றவர்களாக உள்ளனர் என்றார்.

வேட்டைக்காரன் வெற்றியா?-சில உண்மைகள்

வேட்டைக்காரன் வெளியான அன்றே, 'இது சரித்திர வெற்றி, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வெற்றி' என்றெல்லாம் அடித்துவிட்டனர் நடிகர் விஜய்யும் அவரது தந்தையும்.இந்த 'மா...பெரும்' வெற்றிப் படத்தை மேலும் பெரிய வெற்றிப் படமாக்க விஜய் இந்த வாரம் முதல் நகரம் நகரமாக சுற்றுப் பயணம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
இந் நிலையில் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன... இன்றைய நிலவரம் என்ன என்பது குறி்த்து ஒரு அலசல்.இந்தப் படத்தைப் பொறுத்த வரை அதன் ஒரிஜினல் தயாரிப்பாளரான ஏவிஎம் பாலசுப்ரமணியம், கிரேட் எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் சன் டிவியின் பப்ளிசிட்டி மேல் நம்பிக்கை வைத்து வாங்கிய விநியோகஸ்தர்கள்தான் மாட்டிக் கொண்டவர்கள்.முதல் மூன்று தினங்கள் படத்துக்கு ஓப்பனிங் சிறப்பாக வந்திருந்தாலும், திங்கள்கிழமையே டிராப் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட் ஆசிரியரும், பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை சேகரித்து வருபவருமான ராமானுஜம்.அவர் கூறுகையில், '
இந்தப் படம் நிச்சயம் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லி தவறான ட்ரெண்டுக்கு வழிகாட்டவும் கூடாது. விஜய் நடித்த வேட்டைக்காரன் வெற்றி என்றால், ஒரிஜினல் வெற்றிப் படங்களை என்னவென்று சொல்வது...மதுரை, சேலம் பகுதிகளில் 50 சதவீத்துக்கு மேல் 'அடி' விழுந்திருக்கிறது இந்தப் படத்துக்கு.
திருச்சி, திருநெல்வேலியில் மட்டும் தப்பித்திருக்கிறது' என்றார்.சென்னையைப் பொறுத்த வரை, விஜய் தன் வெற்றியின் அளவுகோலாகக் கருதும் கமலா தியேட்டரிலும் கூட 30 சதவீதத்துக்கும் மேல் ரசிகர்கள் வருகை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சத்யம் போன்ற திரையரங்குகளில் இப்போது கெளன்டரிலேயே டிக்கெட்டுகள் கிடைப்பதாக சத்யம் இணையத் தளம் தெரிவிக்கிறது.வேட்டைக்காரனின் ஒரு நகர வினியோக உரிமையை ரூ 3.5 கோடி கொடுத்துப் பெற்றுள்ள பிரபல வினியோகஸ்தருக்கு மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.பொங்கல் சீஸனில் இந்தப் படம் தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் என்பதால், இந்தத் தொகையை அவரால் மீண்டும் பெற முடியாத நிலை.மதுரையில் 50 சதவீதத்துக்கும் அடி என்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், நஷ்டத்தை கூடஇவர்களால் வாய்விட்டு வெளியே சொல்ல முடியாத நிலை. மறைமுகமாக அல்லது தெரிந்த நபர்களிடம் சொல்லி தங்கள் குமுறலைத் தீர்த்துக் கொள்கிறார்கள்."விஜய்க்கு இந்தப் படம் தோல்வியாக அமைய வேண்டும் என்று நாம் கூறவரவில்லை. நிச்சயம் அவரைப் போன்ற நடிகர்களுக்கு இந்த நிலை வரக்கூடாது. காரணம் ரஜினிக்கு அடுத்து அல்லது இணையான மாஸ் ஹீரோ விஜய்தான்.
ஆனால் இன்று உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராகத் திகழும் விஜய், தனது சராசரிக்கும் குறைவான ஒரு படத்தை, வெற்றிப் படம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களைச் சிந்திக்க வேண்டும்" என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத, வேட்டைக்காரன் படத்தின் முக்கிய விநியோகஸ்தர் ஒருவர்.இனிமேல் கதை அம்சம் இல்லாவிட்டால் யாருடைய படமாக இருந்தாலும் தப்பாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இனியாவது விஜய் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்கிறார் அவர்.

Friday, December 25, 2009

இந்திய சிறிலங்கா ஆட்சிபீடங்களின் துருப்புச்சீட்டு சிவாஜிலிங்கம்!!


தென்னிலங்கை அரசியலின் மற்றொரு முக்கிய பேசுபொருளாய் மாறியிருக்கின்றார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தனக்குள் எழுந்த அதீத தமிழ் பற்று மேலீட்டால் தனது கட்சிகளின் ஒருமித்த கொள்கைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணமும் செலுத்தியுள்ளார். தற்போது பரப்புரை நடவடிக்கைகளிலும் தோளில் கறுப்புச் சால்வையுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என்பது யாவரும் அறிந்தவிடயம்.
இந்தியாவின் கொள்கை வகுப்பு சக்திகளும், சிறீலங்காவின் தற்போதைய அரச பீடமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பிரதிபலிப்பாய் சிவாஜிலிங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் எமக்குக் கிட்டியுள்ளன.
சிறீலங்காவின் தேர்தல் களத்தில் எதிர் எதிர்த் தரப்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் சராசரியான சம பலத்துடன் கூடிய போட்டி நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்தத் தேர்தலின் வெற்றி தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களுக்கே உண்டென்பதை இந்தியாவும் சிறீலங்காவும் நன்கு விளங்கிக் கொண்டுள்ளன. ஆட்சிப் பீடத்தில் சரத் பொன்சேகா ஏறுவதை இந்தியா விரும்பவில்லை. காரணம்வேறு ஆனால் இலக்கு ஒன்று என்ற ரீதியில் மகிந்த தரப்பும் சரத்தின் வருகையை ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே தமிழர் தரப்பின் வாக்குகளை மகிந்தவிற்கு இல்லாது விடினும் பறவாய் இல்லை சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை முற்றாக தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த இந்திய மற்றும் சிங்கள ஆட்சிப் பீடங்கள் சிவாஜிலிங்கம் என்ற துருப்புச் சீட்டை தமது கைகளில் எடுத்துக் கொண்டன. தமிழ்த் தேசியத்திற்காகவே தொடர்ந்து போராடிவந்த சிவாஜிலிங்கம் சிறிலங்கா இந்திய ஆட்சி பீடங்களின் சதியை அறியாதவராக அவர்களின் வலையில் விழுந்துவிட்டதுதான் இன்னும் ஆச்சரியமாகவிருக்கிறது.
பெறுமதி மிக்க வாகனம் ஒன்றை வன்னிப் பகுதிக்கு கொண்டு சென்று விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு பல பத்து மணித்தியாலயங்களாக சிறீலங்காவின் இரகசிய பொலிசாரினால் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் இந்தியாவிற்குச் சென்று பின்னர் பல மாதங்களாக வெளிநாடுகளுக்கும் தமிழ் நாட்டிற்கும் மாறி மாறி பயணம் செய்த செய்திகள் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.
இந்தக் காலப் பகுதியில் தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் இந்தியாவினதும் இலங்கையினதும் இறையாண்மை என்று இரு நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கூறப்படுகின்ற அந்த விடயத்தை கேள்விக்குறியாக்குகின்ற வகையிலான காரசாரமான மேடைப் பேச்சுக்களை நிகழ்த்தி வந்த சிவாஜிலிங்கத்தால் எவ்வாறு இரு நாட்டில் இருந்தும் இலகுவாகத் தப்பிக்க முடிந்தது என்ற கேள்வி உங்களுக்கு எழவில்லையா?
பொங்கு தமிழ் நிகழ்வுகளில் உரை நிகழ்த்தினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் சிறீலங்காவின் இரகசியப் பொலிசாரினால் இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்று மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததை யாரும் மறந்திருக்க வாய்பில்லை. ஆனாலும் சிவாஜிலிங்கம் திடீரென்று இலங்கைக்கு வரவும் அவருக்கு எந்த ஒரு நெருக்கடி நிலையும் ஏற்படவில்லையே. இதன் மூலம் சிறீலங்காவில் திடீர் ஜனநாயகம் முளைத்திருக்கிறதா? என்றெண்ணினால் அது நகைப்புக்குரியது.
இந்த விடயங்கள் அனைத்திற்கும் பின்னால் இரண்டு நாட்டு ஆட்சிப் பீடங்களும் இருக்கின்றமை தற்போது அம்பலமாகிவருகின்றது. சிவாஜிலிங்கத்தின் திடீர் நடவடிக்கை இதற்கு சான்று பகர்கின்றது. சிவாஜிலிங்கத்தினை அணுகிய சிங்கள ஆட்சிபீடம் தமிழ்த் தேசிய பற்றாளரை தந்திரமாக பயன்படுத்துவதன் மூலம் தனக்கு கிடைக்காத வாக்குகளை தனது எதிரிக்கும் கிடைக்ககூடாது என்பதில் கவனமாக செயற்படுகின்றது.
அதேவேளை இந்தியாவில் அவர் இருந்த வேளையில் அவரை இந்தியாவின் கொள்கை வகுப்பு சக்திகள் சந்தித்து அவரது தலையில் மிளகாய் அரைத்துள்ளனர். இந்த அரசுகளின் சதிகளை அறியாத சிவாஜிலிங்கத்திற்கு உசுப்பேத்திவிட இன்னொரு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தாவும் இணைந்துகொண்டார்.
அவர் – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப் படாமல், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டு அவர்களின் இடங்கள் நிரப்பப்பட்ட போது அந்தக் கதிரைகளில் ஒன்றைப் பற்றிக் கொண்டவரான சிறீகாந்தா. இவர் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தச் சென்ற போது கூடவே சென்றிருக்கின்றார். இவரே சிறீலங்காவின் அரச தலைப்பீடத்திற்கும் சிவாஜிலிங்கத்திற்கும் இடையிலான தரகர் பணி புரிந்தவர் என்ற உண்மையும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
மகிந்தவோடு சமரச அரசியல் நடத்தினால்தான் தற்போதுள்ள பிரச்சனைகளை தீர்க்கமுடியுமென அண்மைக்காலமாக சொல்லியும் அதற்கு ஏற்றவாறு செயற்பட்டும்வந்தவர்களில் ஒருவர் சிறிகாந்தா. தற்போது மறைமுகமாக மகிந்தவுக்கு உதவி செய்வதற்கு தானோ இவர் சிவாஜிலிங்கத்தை கூட்டமைப்பிலிருந்து கூட்டிச்சென்றார் என்ற கேள்வி எழவே செய்கின்றது.
தமிழ்த்தேசியத்தினை எவரும் விலைக்கு விற்கவோ வாங்கவோ முடியாது! சிவாஜிலிங்கத்திற்கோ அல்லது அவருக்கு துணை நிற்கும் சிறீகாந்தாவிற்கோ மக்களால் வழங்கப்பட்ட வாக்குகள் என்பது அவர்களை பெரிதுபடுத்தி மக்களால் வழங்கப்படவில்லை. மாறாக மண்ணிற்காய் விதையான உயிர்களுக்கான காணிக்கைகளாகவே மக்கள் தமது வாக்குகளை வழங்கினர் என்பதை இந்திய மற்றும் சிறிலங்காவின் அதிகார வர்க்கங்கள் புரிந்துகொண்டுள்ளன. அதனை சரியாக பயன்படுத்த மகிந்தவின் தந்திரபுத்தி பெருமளவில் உதவிசெய்திருக்கிறது. தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்திய ஒரு பிரதிநிதியின் மூலமே மகிந்த தனது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த முயற்சிப்பது இங்கு வெளிப்படையாகவே கண்டுகொள்ளலாம். தமிழ்த் தேசியத்தை உண்மையாகவே பலப்படுத்தவேண்டும் என சிவாஜிலிங்கம் நினைப்பாரானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தனது பணியை முன்னெடுத்திருக்கவேண்டும். அதனைவிட்டு தமிழ்த் தேசிய சக்திகளை பல முனைகளில் உடைக்கும் எதிரிகளின் சதிகளுக்கு துணைபோனவராகவே அவர் வரலாற்றில் இனங்காணப்படுவார்.
ஒருமித்த குரலில ஓங்கி எழுப்பவேண்டிய உரிமைக்குரலை ஒவ்வொரு கூறாக உடைக்கும் இந்த முயற்சிகளை தமிழ்மக்கள் இனங்கண்டுள்ளார்கள். இதனை சிவாஜிலிங்கம் போன்றவர்கள் புரிந்துகொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த சக்தியாக பயணிக்கமுன்வரவேண்டும். அதுவே காலத்தின் தேவை.
இராவணேசன்
பின்குறிப்பு:
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு சில நாட்களுக்குள் வழங்கிய நேர்காணலின் சில பகுதிகள்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பிற்குள் நிலவுகின்ற முரண்பாடுகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலளிக்கையில்…
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து ஒன்றாகவே செயற்படும். ஆனால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் உண்டு. அவையாவும் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்.
கட்சியில் உள்ள குறிப்பிட்ட ஒருசிலர் தாம் எடுக்கும் முடிவுகளை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் திணிக்கவோ மக்களை விருப்புக்கு மாறாக வழிநடத்தவோ முடியாது. அவ்வாறு செயற்பட யாராவது முற்பட்டால் அவர்களை வரலாறு மன்னிக்காது.
சுயநல அரசியலுக்காக எமது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. இந்த ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தின் போது எமது மக்கள் பட்ட துன்ப துயரங்களை எவரும் மறந்துவிட முடியாது. இதை மறந்துவிட்ட நிலையில் கூட ஒரு சிலர் நடந்து கொள்வது வேதனை தருகின்றது. இவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலை நோக்காகக் கொண்டு செயற்பட்டாலும் மக்களின் வலியைப் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறானவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.
இந்தியாவின் நலனுக்காக நாம் அரசியல் செய்ய முடியாது. இந்தியாவின் சதி முயற்சியினாலேயே நாம் இன்று இந் நிலைக்கு வந்துள்ளோம். இந்த ஜனாதிபதி தேர்தலிலும் இந்தியா தனது நலனைக் கருத்திக் கொண்டு யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென கூட்டமைப்புக்கு உத்தரவிடலாம்.
ஆனால் நாம் அதற்கு இசைந்து போக முடியாது. எனினும் இந்தியாவின் சொல்லைத் தட்ட முடியாது எனத் தெரிவித்து அல்லது இராஜதந்திர காய் நகர்த்தல் எனக் கூறி எமது கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒரு சிலர் இந்தியாவின் உத்தரவுக்கு இணைந்து போக முற்படலாம். ஆனால் அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் அது பாதகமான நிலையையே ஏற்படுத்தும்.

தடுப்பு முகாமிலுள்ள போராளிகளை கூண்டோடு அழிக்க சிறிலங்கா புலனாய்வுத்துறை சதி

சிறிலங்கா அரசஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக (ஜனவரி 26ம் நாளுக்கு முன்), இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான முன்னாள் போராளிகளைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத, மனிதஉரிமை ஆர்வலர் ஒருவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளதாக ‘சிறிலங்கா – சாட்சிகள் இல்லாத போர்’ [War Without Witness] என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அத்தளம் தெரிவித்துள்ளதாவது:
இராணுவப் புலனாய்வுத்துறையினரின் திட்டத்தின்படி முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாரிய முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்படும்.
இந்தத் தாக்குதலுக்கு தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்கள் சிலரைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்படும் போது அதை முறியடிப்பது என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவத்தினர், தடுப்பு முகாமில் உள்ள முன்னாள் போராளிகளையும், தாக்குதல் நடத்தியவர்களையும் கொலை செய்து விடுவர்.
முன்னாள் போராளிகளை மீட்கும் நோக்குடன் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலை தாம் முறியடித்த போதே, அனைத்து முன்னாள் போராளிகளும் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறி நியாயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசஅதிபர் தேர்தல் அடுத்த மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் இந்தப் படுகொலைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகப்பெரிய படுகொலையாக அமையும் என்றும் அந்த மனித உரிமை ஆர்வலர் எச்சரித்துள்ளார்.
சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் பத்தாயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 24, 2009

அறப்போர் செய்வோம்! - ஜெகத்கஸ்பர்


"மறக்க முடியுமா?' பகுதிக்கு இரண்டு கட்டுரைகள் எழுதுங்களேன் -என நண்பர் காமராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டதில் தொடங்கியது இப்பயணம். நாற்பது வாரங்கள், 80 பதிவுகள் என நீண்டு தொடர்கிறது.

காலத்தின் வலியாய், வலிகளின் அங்கலாய்ப்பாய், அங்க லாய்ப்புகளின் அந்தரிப்பாய், அந்தரிப்புகளின் அடக்க முடியாத கோபங்களாய்.நிறுத்திவிட நினைத்த தருணங்கள் பல.

அவ்வப்போது ஆசிரியர் நக்கீரன்கோபால், இணையாசிரியர் காமராஜ் இருவரிடமும் இதனைக் கூறுவேன். ""இல்லை, சகலமும் தகர்ந்துபோய் விட்ட அவநம்பிக்கையில் இருக்கும் நம் மக்க ளுக்கும், உணர்வாளர்களுக்கும் இன்று முக்கிய மாகத் தேவைப்படுவது ஆறுதலும், நம்பிக்கையும் -அதனைத் தருகிற சிறு களமாக நக்கீரன் இருக்க விரும்புகிறது. எனவே தொடர்ந்து எழுதுங்கள்'' என இருவரும் இப்படியாகப் பதில் தருவார்கள். தமிழீழக் கனவு பட்டுப்போகவில்லை, உயிர்த் துடிப்புடன்தான் இருக்கிறது என்று கூக்குரலிட விரும்பும் லட்சக்கணக்கான நக்கீரன் உணர் வாளர்களுக்கு இதுவரை எழுதிய யாவற்றையும் சமர்ப்பிக்கிறேன்.தினம் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து விடுவேன்.

4.25-க்கு எழுப்புமணி அடிக்கும். படுத்துக்கொண்டே ஐந்து நிமிடம் எனது "ப்ளாக்பெர்ரி' (Blackberry) அலைபேசியில் முக்கிய மின்அஞ்சல்களையும், ஈழத்துச் செய்திகளையும் துரிதகதியில் கழுகுப் பார்வை பார்ப்பது வழமை. இவ்விதழ் எண்பதாம் கட்டுரையை எழுதும் நாளதன் காலைப்பொழுதில் எனது ப்ளாக்பெர்ரி காட்டிய முதற் செய்தி பிரித்தானிய ஈழத்துப் பெண் வாணிகுமார் லண்டனிலிருந்து வெளிவரும் "தி அப்செர்வர்' (The Observer) இதழுக்கு முள்ளிவாய்க்கால் கொடுமையிலிருந்து தப்பிய தமிழ்ப் பெண்கள், சிங்கள ராணுவ மிருகங்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கப்படும் பெருங்கொடுமை பற்றி வழங்கியிருந்த செவ்வி.
வாணிகுமார் லண்டனில் மருத்துவப் படிப்பு முடித்தவர்.

பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழ்ப்பெண். சிங்களப் பேரினவாதம் தமிழரின் இறைமை, மனிதம் இரண்டையும் நசுக்கி அழிக்கத் தொடங்கிய இறுதி யுத்த நாட்களில் அம்மக்களின் துன்பங்களோடு நடந்தவர். முள்ளிவாய்க்காலின் இனஅழித்தல் கொடுமைகளை நேரில் கண்டவர். மே 18. ஆயுத மௌனிப்பிற்குப் பின் அகதியாய் வவுனியா "மெனிக் பார்ம்' வதை முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.

பிரித்தானிய அரசின் முயற்சியால் செப்டம்பர் 25-ம் நாள் விடுதலையாகி லண்டன் சென்ற அவர், தொடர்ந்தும் வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தன் உறவுகள் நண்பர்களின் பாதுகாப்பு கருதி இதுவரை பேசாதிருந்தார். இப்போது தான் கண்ட உண்மைகளுக்கு உலகினது மனசாட்சியின் முன் சாட்சியமாய் நிற்க முன்வந்துள்ளார்.

போரின் நாட்களில் காய முற்ற நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களுக்கு வைத்தியம் செய்த வாணிகுமார் வவுனியா மெனிக் முகாமை "வதை முகாம்' (Concentration Camp) என்றே வருணித்துள்ளார். அவரது வாக்குமூலத்தில் வஞ்சிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் மௌன வலிகள் பதிவாகியுள்ளன. இதோ வாணிகுமார் பேசுகிறார் : ""தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வல்லுறவானது பரவலாகவும், சாதாரணமான ஒன்றாகவும் இருந்தது. அதிகாரிகளுக்கு இசைய மறுத்தால் உயிரோடிருக்க முடியாதென்பது அப்பெண்களுக்குத் தெரிந்திருந்தது. பொது வாகவே தமக்கு நேரும் பாலியல் வல்லுறவுக் கொடுமைகளை அவமானம் கருதி தமிழ்ப்பெண்கள் வெளியில் சொல்வதில்லை. ஆனால் வதை முகாம் கொடுமை எந்த அளவுக்கென்றால் இளம்பெண்கள் பட்டியலிடப்பட்டு, அதிகாரிகளின் வல்லுறவுக்கு இசைந்தால் உணவோ, கொஞ்சம் சில்லறைப் பணமோ தரப்படும் நிலைக்கு அவர்களின் மனிதம் கீழ்மைப்படுத்தப்பட்டது.

''வாணிகுமாரின் வாக்குமூலம் உலக ஊடகங்களுக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் பாலியல் வல்லுறவை தமிழ் மக்களுக்கெதிரான இன அழித்தல் ஆயுதங்களில் ஒன்றாக இலங்கை ராணுவம் பயன்படுத்தியது, பயன்படுத்தி வருகிறதென்பது நமக்கொன்றும் புதிய செய்தியல்ல. நினைவுகள் பின்னோக்கித் திரும்புகின்றன. 1996-ம் ஆண்டு. தமிழீழ விடுதலை அரசியலில் நான் தீவிரமாக ஈர்க்கப் பட்டிருந்த காலம்.

அவ்வாண்டின் ஜூலை 18-ம் நாள் உலகெங்கும் பரந்து வாழ்ந்த தமிழருக்கெல்லாம் நம்பிக்கை கிளர்ச்சியூட்டி அலையலையாக வந்த விடுதலைப்புலிகளின் அணியினர், வன்னிப்பகுதியை ஆக்கிரமித்து நின்ற சிங்கள ராணுவத்தினரின் தலைமையகமான முல்லைத்தீவு முகாமினை தாக்கி அழித்தனர். அங்கு புலிகள் கைப்பற்றிய ஆயுதங்கள் பலநூறு கோடி ரூபாய் பெறுமதியானவை.

சுமார் 1200 ராணுவத்தினர் அத்தாக்குதலில் உயிரிழந்தனர்.உயிரிழந்த ராணுவத்தினரின் உடல்களை அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்ப டைக்கும் கடமையில் முன்நின்று இயங்கியவர்களாய் பெண்புலிகள் இருந்தனர். யுத்தகள செய்திகளை உன்னிப்பாய் கவனித்து வந்த எனக்கு இது வியப்பளித்தது.

நல்ல நிலையில் மீட்கப்பட்ட சுமார் 400 ராணுவ உடல்களை தூய வெள்ளைத் துணி கொண்டு போர்த்திப் பொதிந்திருந்தனர். எதிரியாயினும் தரையில் பிணமாகி விழுந்த பின் அது "வணக்கத்திற்கும் மாண்பிற்குமுரிய மனித உடல்' என்ற யுத்த நெறியைப் பின்பற்றி இலங்கை ராணுவத்தினரின் உடல்களுக்கு அப்பெண் புலிகள் உரிய போற்றுதல் செய்தனர். "ஏன் பெண்புலிகள்...' என்ற கேள்வி மட்டும் பல நாட்களாய் என்னை அப்போது குடைந்துகொண்டே இருந் தது.

பின்னர்தான் தெரிய வந்தது வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நேரடியாகப் பணித்ததன் பேரில்தான் பெண்புலிகள் முன்நிறுத்தப்பட்டார் களென்றும், சிங்கள ராணுவத்தினருக்கு நல்லொழுக்கப் பாடமொன்றை கற்றுத்தரவேண்டியே அவர் அவ்வாறு செய்தாரென்றதுமான உண்மை.பிரபாகரன் அவர்களது ஆழ்மனதில் ஆறாவடு ஏற்படுத்திய நிகழ்வாக 1993-ம் ஆண்டு புலிகள் நடத்திய பூநகரி ராணுவ முகாம் தாக்குதல் கூறப்படுகிறது. வலம்புரி 1, 2 என பெயரிடப் பட்ட நடவடிக்கைகள் மூலம் சிங்கள ராணுவம் 1992-ல் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த பூநகரி பகுதி ராணுவ ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. பூநகரியை மீட்டெடுக்க 1993 நவம்பரில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பாரிய நகர்வில் பெண்புலிகள் அணி முக்கிய அங்கமாய் நின்றன. ஆனால் புலிகளின் தாக்குதல் திட்டங்களை அவர்களுக்கு சமையல் வேலை செய்த இரு துரோகிகள் சிங்கள ராணுவத்தினருக்குச் சொல்லிவிட பொறிகள் பரப்பி புலிகளின் வரவிற்காய் ராணுவத்தினர் காத்திருந்தனர்.

எதிர்பாரா திருப்பித் தாக்குதலை எதிர்கொண்ட புலிகளின் அணிகள் கடும் இழப்புக்களோடு ஆனால் மெய்சிலிர்க்க வைக்கும் தற்காப்புச் சமர் நடத்தி பின் நகர்ந்தன. இச்சமரில் வீரமரணம் தழுவிய பெண்புலிகளின் மார்பகங்களை அறுத்தும், தாய்மைப் பீடங்களில் விறகுக் கம்புகளை அடித்தேற்றி யும் ராணுவம் செய்த கீழ்மைச்செயல் தலைவர் பிரபாகரன் உள்ளத்தில் அழியாத காயத்தை உண்டாக்கியதாகச் சொல்லப் படுகிறது. அக் கீழ்மைக்குக் கீழ்மையால் பதில்தர விரும்பாத அவர் பண் பொழுக்கத்தால் பதில்கூற விரும்பி னார். அதன் வெளிப்பாடாகத்தான் முல்லைத்தீவு முகாமில் உயிரிழந்த ராணுவ உடல்களை பெண்புலிகள் வணக்கத்துடன் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்ப டைக்கச் செய்தார்.வானொலி நாட்களில் சிறு குழுவாய் நின்று சிதைக்கப்பட்ட தமிழ் பெண்களுக்காய் அனைத்துலக அரங்குகளில் நாங்கள் நடத்திய சிறு சிறு போர்களின் மறக்க முடியா நினைவுகள் அணி வகுக்கின்றன.

சிலப்பதிகாரத்துக் கண்ணகிக்கு கோயில் வைத்த புங்குடு தீவில், ஆண்டாண்டு காலமாய் அக்கோயிலை பராமரித்து வந்த அர்ச்சகரின் மகள், சிங்கள ராணுவக் காடையர்கள் பலரால் சிதைக்கப்பட்டு, சிதைந்தபின், அவளின் தாய்மைப் பீடத்திலேயே வெடிகுண்டு வைத்துத் தகர்த்த அரக்கத்தனத்தின் நாளில்...1996 செப்டம்பர் 7.

சுண்டிக்குளி உயர்நிலைப்பள்ளியில் காலாண்டுத் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது கிருஷாந்தி குமாரசாமி என்ற பிள்ளையை கைதடி ராணுவ முகாமின் காடையர்கள் குழுவாய் புணர்ந்து அரை உயிர் அகற்ற, சிலமணிகள் மயங்கிக் கிடந்து பின் கண் விழித்து "தண்ணீர் தாருங்கள்' எனக்கேட்ட அந்தப் பிள்ளையை மேலும் ஆறுபேர் வன்புணர்ந்து மூச்சடக்க, இரவில் பிள்ளையைத் தேடிப்போன 59 வயது தாய் ராசம்மா, 16 வயது தம்பி பேரின்பன், துணைக்கு உடன்போன 35 வயது கிருபாகரன் மூவருமே கண்ட துண்டமாய் வெட்டப்பட்டு புதைக்கப்பட்ட கொடுமையின் நாளில்...அதே 1996-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் நாள் 22 வயது ரஜினி என்ற தமிழ் நங்கை கனடா நாடு செல்வதற்கு விசா கிடைத்த சந்தோஷச் செய்தியை கோண்டாவிலில் வசிக்கும் தன் உறவுகளுக்குச் சொல்லிவிட்டுத் திரும்புகையில் கோண்டாவில் - உரும் பிறாய் சாலையில் வைத்து சிங்கள ராணுவ மிருகங்களால் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலையான நாளில்... போர்கள் செய்தோம். நீதி கிடைக்கவில்லைதான்.

ஆயினும் எங்களுக்குத் தெரிந்த களங்களில் சமர் செய்தோம். குறைந்தபட்சம் அனைத் துலக மனித உரிமை மீறல் ஆவணங்களில் பதிவேனும் செய்தோம்.அன்று ஒன்றிரண்டாய் ஆங்காங்கு நடந்தவை இன்று நூற்றுக்கணக்கிலாக நடக்கிறது. தமிழ்ப்பெண்களின் உடல் சார்ந்த அடிப்படை உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாய் இருந்த சிங்களப் பேரினவாத வக்கிரத்திற்கு தடையிட்டுப் பாதுகாப்பாய் நின்றவர்கள் விடுதலைப்புலிகள். முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தில் ஒரு சிங்களப் பெண்ணிடம்கூட விடுதலைப்புலிப் போராளிகள் முறை தவறி நடந்ததாய் நிகழ்வில்லை. அத்துணை ஒழுக்கப் பெருமிதத்தின் பிள்ளைகளாய் நின்றவர்கள் அவர்கள்.

அவர்களை அழித்து முடித்துவிட்ட நிம்மதியில் உலகத்தின் நீதிமான்களெல்லாம் அகன்றுபோய்விட்ட நிலையில் சிறு போர்களே இன்று நம்மால் ஆகக்கூடியது. செய்வோம்.

உண்மைகள் உறங்குவ தில்லை. சிங்களப் பெண்கள் ஒருவரைக்கூட சிதைக்காத புனிதமிகு விடுதலைப்போராட்டம் நடத்திய ஒரு இனத்தின் மக்கள் என்ற பெருமிதத் திமிரோடு அறப்போர் செய்வோம்.

ஆயுத விமானம் ஈரானுக்கு செல்லவில்லை, இலங்கைக்கு சென்றது- தாய்லாந்து

தாய்லாந்தில் ஆயுதங்களுடன் வந்த சரக்கு விமானம் ஈரானுக்கு செல்லும் நோக்கில் பயணத்தில் ஈடுபடவில்லை. மாறாக, இலங்கை க்குத்தான் அந்த விமானம் சென்று கொண்டிருந்தது என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 12ம் தேதி பாங்காக் விமான நிலையத்தில் அந்த ஆயுதங்களுடன் கூடிய விமானம் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியது. அப்போது விமானத்தில் சோதனையிடப்பட்டது.
அந்த சோதனையின்போது வட கொரியத் தயாரிப்பு ஆயுதங்கள் விமானத்தில் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து விமானம் கிளம்பிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த விமானத்தில் இருந்த ஊழியர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்இந்த விமானம் ஈரானுக்கு செல்லவிருந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த விமானம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள ஐந்து ஊழியர்களுமே தாங்கள் இலங்கை செல்லும் திட்டத்தில்தான் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், பிரபல ஆயுத வியாபாரியான விக்டர் போட் என்பவருக்கு இந்த ஆயுத சப்ளையில் பங்கு இல்லை என்றும், போட்டை தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து ஐந்து ஊழியர்களின் வக்கீலான சோம்சாக் சைதோங் கூறுகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐவரையும் சந்தித்துப் பேசினேன். அப்போது தங்களுக்கு போட்டைத் தெரியாது என்று அவர்கள் தெளிவாகத் தெரிவித்தனர்.
மேலும், தாங்கள் இலங்கை செல்லுமாறே பணிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.இந்த ஐந்து பேரில் நான்கு பேர் கஜகஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பெலாரஸைச் சேர்ந்தவர்.இலங்கை செல்லும் வழியில் பாங்காக்கில் எரிபொருள் நிரப்பும் திட்டத்துடனேயே தாங்கள் தரையிறக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றனர்.இந்த விமானத்தை ஹாங்காங்கைச் சேர்ந்த யூனியன் டாப் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் வாடகைக்கு அமர்த்தியுள்ளது.
வட கொரியாவின் பியான்யாங்கிலிருந்து டெஹ்ரானுக்கு எண்ணை தொழிற்சாலைகலுக்கான உதிரி பாகங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக கூறி ஹாங்காங் நிறுவனம் இந்த விமானத்தை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.வழியில் அஜர்பைஜான், உக்ரைன் ஆகிய நாடுகளில் இந்த விமானம் தரையிறங்கியுள்ளது. எனவே இந்த விமானத்தின் போக்கு குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.முன்னதாக இந்த விமானம் குறித்து அமெரிக்கா, தாய்லாந்து அதிகாரிகளை உஷார்படுத்தியது. இதையடுத்தே விமானத்தில் ரெய்டு நடத்தப்பட்டு விமானம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.விமானத்தில் மொத்தம் 35 டன் ஆயுதங்கள் உள்ளன. ராக்கெட் கிரானைடுகள், தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவை இதில் உள்ளன.விமான ஊழியர்கள் வைத்துள்ள ஆவணங்களில் இலங்கையில் உள்ள எண்ணை துரப்பண நிறுவனத்திற்கான உதிரி பாகங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் உள்ள ஆயுதங்களை உண்மையில் எந்த நாடு வாங்கியுள்ளது. இலங்கையா அல்லது ஈரானா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. ஆனால் இலங்கைதான் இந்த ஆயுதங்களை வட கொரியாவிடமிருந்து ரகசியமாக வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.அமெரிக்காவின் கழுகுப் பார்வை தங்கள் மீது முழுமையாக நிலை கொண்டிருப்பதால், வெளியில் ஆயுதங்கள் இனி தேவையில்லை என்று கூறிக் கொண்டு ரகசியமாக இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாக ஒரு சந்தேகம் உலவுகிறது.

''அய்யோ... தங்கச்சி'' கதறும் ஈழ அணன்!




சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு பிரபாகரனின் மகள் துவாரகா படுகொலை செய்யப்பட்டார் என்று சமீபத்தில் சில புகைப்படங்கள், பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டன.

தமிழகத் தலைவர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த புகைப்படங்கள்.ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது துவாரகா இல்லை என்று கொழும்பிலிருந்து நமக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகளுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள அந்த இளம்பெண் யார் என்பது குறித்து பல்வேறு ஸோர்ஸ்கள் மூலம் விசாரித்தோம்.அப்போது, படுகொலை செய்யப்பட்டுள்ள அந்த இளம்பெண்ணின் பெயர் இசைப்பிரியா என்றும் விடுதலைப்புலிகளின் தமிழீழ தேசிய தொலைக் காட்சியில் செய்திப் பிரிவில் பணியாற்றியவர் என்றும் நமக்கு தகவல் கிடைத்தன.

மேலும் இசைப்பிரியாவின் சகோதரர் கணேசன் தமிழகத்தில் இருக்கிற தகவலும் கிடைத்தது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அவரை நாம் சந்தித்தோம்.நம்மிடம் பேசிய கணேசன், ""பத்திரிகைகளில் வெளியான படத்தில் இருப்பது தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் கிடையாது. அது, என் தங்கை இசைப் பிரியாவின் உடல். அதாவது என் சித்தப்பாவின் இரண்டாவது மகள்தான் இசைப்பிரியா. போரின் இறுதிநாளில் சிங்கள ராணுவத்தினரிடம் சரணடைந்தவளை மிகக் கொடூரமாக கொன்றிருக்கிறார்களே'' என்று கூறி கதறினார்.

தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை.கொஞ்சநேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு விட்டுப் பேசிய அவர், ""என் சித்தப்பா தர்மதுரை, சின்னம்மா பார்வதி. இவர்களுக்கு 4 மகள்கள். மூத்த மகள் கனடாவில் இருக்கிறார். மற்ற 3 மகள்களுடன் யாழ்ப்பாணத்தில் இருந்தது சித்தப்பா குடும்பம். இதில் இரண்டாவது பெண்தான் இசைப்பிரியா. இவளது ஒரிஜினல் பெயர் சங்கீதா. இயக்கத்தில் சேர்ந்த பிறகுதான் இசைப்பிரியா என்று மாற்றப்பட்டாள்.

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார் என் சித்தப்பா. அந்த சூழலில், யாழ்ப் பாணத்தைப் பிடிக்க ராணுவம் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் பிடித்துக் கொண்டதையடுத்து பல குடும்பங்கள் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தன.அப்படி இடம்பெயர்ந்ததில் 3 பெண்களுடன் என் சின்னம்மா கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தார்.

1995-லிருந்து 2008 வரை எந்த பிரச்சினையுமே இல்லை. பள்ளி களில் படிக்கிற காலகட்டத்திலேயே என் தங்கைக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தது. நிறைய எழுதினாள். நாடகங்களில் நடித்தாள். அதனால், அவளை எல்லோருக்கும் தெரியும்.





தற்போது அவளுக்கு 28 வயதாகிறது. மூன்று வருடங்களுக்கு முன்புதான்... புலிகளின் அரசியல் பிரிவில் இணைந்தாள். புலிகளின் ஊடகமான நிதர் சனத்தில் செய்திப் பிரிவில் பணியில் அமர்த்தப்பட்டாள் என் தங்கை. மேலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்தாள். அப்போது "வேலி' உட்பட சில குறும்படங்களிலும் நடித்தாள் இசைப்பிரியா. இதுதான் அவளைப் பற்றிய விபரம்'' என்று கூறியவர் மேலும், ""2008-லிருந்தே சிங்கள ராணுவம் யுத்தத்தை உக்கிரமாக நடத்தியது. தமிழீழத்தின் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமித்துக் கொண்டே வந்த ராணுவம், கிளிநொச்சியை பிடித்துக் கொண்டபோது, கிளிநொச்சியில் இருந்த அத்தனை மக்களும் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந்தனர். போரும் உக்கிரமானது.

விமானப்படையும் ராணுவமும் தொடர்ச்சியான எறிகணைகளையும் பீரங்கி தாக்குதல்களையும் நடத்தியபோது... காடுகள், மலைகள் என ஒவ்வொரு பகுதியாக மாறி மாறி ஓடிக் கொண்டேயிருந்தனர் மக்கள்.அந்த சூழலில், இசைப்பிரியாவும் அவளது அடுத்த தங்கை ஷோபனாவும் ஒரு இடத்திலும் என் சின்னம்மாவும் கடைசி பெண்ணும் ஒரு இடத்திலும் என பிரிந்துவிட்டனர்.

போர் தீவிரமானது. நிலப்பரப்புகள் சுருங்கியது. ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள். யார் யார் உயிருடன் இருக்கிறார்கள், இல்லை என்று எதுவும் தெரியாது.யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருந்தது.

சிங்கள அரசு உருவாக்கிய "பாதுகாப்பு வளைய' பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்து சரணடைந்து கொண்டிருந்தனர். இறுதி நாளின் போது, ஆயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் சரணடைந்தனர். இவர்களில் என் தங்கைகள் இசைப்பிரியாவும் ஷோபனாவும் இருந்தனர். போர், முழுமையாக முடிவுக்கு வந்ததை அடுத்து... என் தங்கைகள் இருவரும் தடுப்பு முகாமில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து நிம்மதியடைந்தோம்.இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, ஒருமுறை இசைப் பிரியாவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தடுப்பு முகாமில் நடக்கும் அவலங்களைச் சொன்னாள். ராணுவத் தினரின் கொடூர நட வடிக்கைகளையும் விவரித்தாள்.

அதற்கு பிறகு தொடர்பு இல்லை. ஒருநாள் "இளைஞர்களையும் இளம்பெண்களையும் போராளிகளையும் தனித்தனியாக பிரித்து வேனில் ஏற்றி தடுப்பு முகாம்களிலிருந்து வெளியே கடத்திட்டுப் போகிறது ராணுவம்.

எங்கே கொண்டு போகிறதென்று விளங்கலை. இதில் உன் தங்கைகளும் உண்டு' என்று ஒரு தகவல் கிடைக்க, பதறிப் போனோம். துடிதுடித்தோம். தங்கைகள் எங்கே இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் களுக்கு என்னாச்சோ என்கிற கவலையிலேயே நாட்களை கடத்திக் கொண்டிருந்தோம். ஐந்து மாதமாக எந்த தகவலுமே அவர்களைப் பற்றி கிடைக்கவில்லை.

இந்த சூழலில்தான், "பிரபாகரனின் மகள் துவாரகா படுகொலை செய்யப்பட்டார்' என்று வெளியான புகைப்படத்தில் இருந்த இசைப் பிரியாவின் உடலைப் பார்த்து துடிதுடித்துப் போனோம். என் தங்கை மாதிரி, இன்னும் எத்தனை இளம்பெண் களை படுகொலை செய்திருக்கிறார் களோ? இசைப்பிரியாவோடு இருந்த மற்றொரு தங்கை ஷோபனாவுக்கு (26 வயது) என்ன நேர்ந்துள்ளது என்றும் புரியவில்லை. நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது!''

என்று கதறினார்.சிங்கள ராணுவத்தினரின் கொடூரங்களும் வக்கிரங்களும் இசைப்பிரியாவின் படங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசியபோது,

""தமி ழினத்தின் அடுத்த தலை முறையே இருக்கக்கூடாது என்பதில் சிங்கள அரச பயங்கரவாதம் உறுதியாக இருக்கிறது. அதனால்தான், தடுப்பு முகாம்களில் இருந்த இளம்பெண்களையும், இளைஞர்களையும் கடத்திச் சென்றது ராணுவம். அந்த வகையில், 20 ஆயிரம் பேர் கடத்தப்பட்டனர் என்று மனித உரிமை அமைப்புகள் சொல் கின்றன. இப்படி கடத்தப் பட்டவர்கள் இலங்கை முழுவதும் உள்ள பல்வேறு ராணுவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு, தமிழ் இளம்பெண்கள் ராணுவத்தின் கூட்டு கற்பழிப்புக்கு உட்படுத்தப்பட்டு பல சித்ரவதைகளுக்கு பின்பு கொல்லப்பட்டனர். அதேபோல, இளைஞர்களையும் சித்ரவதை செய்து நிர்வாணப்படுத்தி கொடூரமாக சுட்டுக்கொன்றனர். தமிழ் இளைஞர்கள் அப்படி கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள்தான் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது, இசைப்பிரியாவிற்கு நேர்ந்துள்ள இந்த கொடூரம்!'' என்கின்றனர்.மேலும் அவர்களிடம் பேசியபோது,

""பிரபாகரனின் மகள் துவாரகாவைப் போல ஓரளவுக்கு முகம் ஒற்றுமையுள்ள இசைப்பிரியாவின் படத்தை ரிலீஸ் செய்து, தமிழர்களிடம் ஒரு உளவியல் சிக்கலை ஏற்படுத்த ராணுவம் முயற்சிப்பதாகத்தான் தெரிகிறது.

ஏனெனில் ராணுவத் தரப்பிலிருந்துதான் இந்தப்படம்... பல இணைய தளங்களுக்கும் போயிருக்கிறது. ரத்தவெறி பிடித்த சிங்கள ராணு வத்தின் வக்கிரங்களைத்தான் இது காட்டுகிறது. இன்னும் எத்தனை எத்தனை தமிழ் பெண்களின் சடலங்களை காட்டப்போகிறதோ ராணுவம்?'' என்று ஆதங்கப்பட்டனர்.


விடுதலைப்புலிகளின் கப்பற்படை சிறப்புத் தளபதி யான சூசையின் தலைமையின் கீழ், கப்பற்படையின் ஒரு பிரிவின் தளபதியாக பணிபுரிந்தவர் ஸ்ரீராம். இவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இசைப்பிரியா. இவர்களின் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக 5 மாத கைக்குழந்தை. ஸ்ரீராமின் மதிநுட்பம் அறிந்து, ஒருகட்டத் தில் தனது புலனாய்வுப் பிரிவிற்கு அவரை அழைத்துக் கொண்டார் பொட்டுஅம்மான். கிளிநொச்சியை விட்டு முல்லைத்தீவிற்கு இடம் பெயர்ந்திருந்த நிலையில், போர் உக்கிரமடைந்திருந்ததால் இசைப்பிரியாவும் ஸ்ரீராமும் சந்திக்கவே முடியவில்லை. உக்கிரமடைந்த ஷெல் தாக்குதலில், இவர்களின் 5 மாதக் குழந்தை பலியானது. அதேபோல, போரின் இறுதிநாளில், புதுக்குடியிருப்பு பகுதியின் மீது விமானப்படை வீசிய தொடர்ச்சியான குண்டுவீச்சில் வீரச்சாவடைந்தார் ஸ்ரீராம்.




கவர்ச்சி நடிகை ஷகிலா, சென்னையை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்துகொள்கிறார்.


கவர்ச்சி நடிகை ஷகிலா, சென்னையை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்துகொள்கிறார். இவர்கள் திருமணம், சென்னையில் வருகிற ஜுன் மாதம் நடக்கிறது.

நான் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். சினிமாவில் நான் பிரபல நடிகையாக புகழ் பெறுவதற்கு எங்க அம்மாதான் காரணம். அவர் எனக்கு பாதுகாப்பாகவும், துணையாகவும் இருந்தார். சமீபத்தில், அம்மா மரணம் அடைந்து விட்டார். அந்த கவலையில், உடல் மெலிந்து விட்டேன். முன்பு இருந்ததை விட, 20 கிலோ எடை குறைந்து இருக்கிறேன்.
அம்மா இறந்தபின், நான்தான் சமைக்கிறேன். நான் சமைத்த சாப்பாட்டை, சாப்பிட பிடிக்கவில்லை. உணவு பழக்கவழக்கங்கள் மாறிவிட்டதால், என் உடல் மெலிந்து வருகிறது.
கடந்த இரண்டரை வருடங்களாக, நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர், சென்னையை சேர்ந்த ஒரு தொழில் அதிபர். இப்போதைக்கு அவருடைய பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அம்மாவின் மறைவுக்குப்பின், எனக்கு ஒரு பாதுகாப்பும், துணையும் தேவைப்படுகிறது.
அதனால், என் காதலரை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். அதற்கு, அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார். எங்கள் திருமணம், சென்னையில் வருகிற ஜுன் மாதம் நடைபெற இருக்கிறது. இது காதல் திருமணம் என்றாலும், அவருடைய பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கிறது.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நான் நடிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

Wednesday, December 23, 2009

பிரபாகரன் தப்ப தயார் நிலையில் இருந்த கப்பல் : இலங்கை கடற்படை தகவல்

விடுதலைப் புலிகள் ஆயுத கடத்தலுக்காக பயன்படுத்தி வந்த கப்பல், இறுதிக் கட்ட போர் நடந்தபோது, பிரபாகரன் தப்பிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் செல்வராஜா பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு படையினரால் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், புலிகளுக்கு சொந்தமாக ஐந்து கப்பல்கள் இருப்பது தெரிந்தது. அதில் ஒரு கப்பலை இலங்கை கடற்படை சமீபத்தில் பறிமுதல் செய்தது. அந்த கப்பல், நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. "பிரின்சஸ் கிறிஸ்டினா' என்ற அந்த பிரம்மாண்ட கப்பல், புலிகளுக்காக ஆயுதம் கடத்த பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பல் தொடர்பான மேலும் பல புதிய தகவல்களை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மே மாதம், புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள், இலங்கையில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். கடல் வழியாக தப்பிப்பதே பாதுகாப்பானது என, முடிவு செய்த அவர்கள், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள பிரின்சஸ் கிறிஸ்டினா கப்பலை இதற்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்தனர். பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்காக இந்த கப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே பிரபாகரன் உள்ளிட் டோர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானகரமான முடிவொன்று எட்டப்படவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பில் நேற்றைய தினம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் பெறுபேறாக கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது.தமிழ்க் கைதிகளின் விடுதலைக்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி யின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம், மலையகத் தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் ஹட்டனில் வைத்து வேண்டுகோள் விடுத்திருந்தன.
இந்தப் பின்னணியில், நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார். அனைத்துக் கைதிகளின் பிரச்சினைக ளையும் ஒரே தடவையில் தீர்த்துவைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் கூறினார்.
வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர். அதேநேரம், தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்களை அனுப்பிவைத்திருந்தனர்.
இதன் விளைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிசட்ட மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டது.
இதற்கிணங்க, கைதிகள் கோவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென பத்துச் சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி வழக்குத் தொடர்வதற்கு அவசியமில்லாதவர்களை விடுதலை செய்யவும் ஏனையவர்களுக்கு வழக்குத் தொடரவும் ஒழுங்குகள் மேற்கொள்ள ப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், தற்போது அனைத்துக் கைதிகள் தொடர்பிலும் ஒரே தடவையில் நடவடிக்கை எடுப்பது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு ஏதுவாகவே நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரமளவில் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகவு ள்ளது. வழக்குகள் எதுவுமின்றி பல்வேறு சிறைகளில் சுமார் 600 தமிழ்க் கைதிகள் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, December 21, 2009

வி.புலிகளின் கப்பல் இன்று மதியம் கொழும்பு வந்தது (2ம் இணைப்பு)







"பிரின்சஸ் கிருஸ்டீனா" என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கப்பலை தாம் கைப்பற்றி இருப்பதாக இன்று காலை இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து நிருபர் தெரிவித்தார்.
ஆயுதங்களைக் காவிச் செல்லக் கூடிய இந்தக் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைப்பற்றியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளபோதும், இது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதா இல்லை சர்வதேச போலீசாரின் உதவி நாடப்பட்டதா என்பது போன்ற விபரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.
சுமார் 90 மீட்டர் நீளமான இந்தக் கப்பலில் பனாமா நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இக் கப்பல் வெகு விரைவில் இலங்கை வந்துசேரும் எனக் கூறும் அரசு, நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இதை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறது என்பது புலனாகிறது. இக் கப்பல் இலங்கை வந்தடைந்தால் சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவின் செல்வாக்கு அதிகரிக்கும் என அரசு கனவு காண்கிறது.

அரசியல் பிரிவு தலைவர்களை படைத்தரப்பு சுடவில்லையாம் - சவீந்திர சில்வா

கடந்த வாரம் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரும் முன்னாள் ராணுவத்தள பதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார் எனக் கூறப்பட்ட தகவலில், புலிகள் அரசியல் துறையினரை சுட்டுக்கொல்லுமாறு, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சவீந்திர சில்வாவுக்கே உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினர் வெள்ளைக் கொடிகளுடன் வந்த போது அவர்களை படையினர் சுட்டுக்கொன்றதாக வெளியான தகவலை தாம் செய்தித்தாள்களிலேயே வாசித்ததாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 58 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
புலிகள் வெள்ளைக்கொடிகளுடன் வந்த போது அவர்களை படையினர் சுட்டுக்கொன்றனர் என வெளியான தகவலில் உண்மையில்லையாம், அதோடு ராணுவ அதிகாரி ஒருவரினாலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்குமானால் அதற்கு தாம் வருந்துவதாகம் கூறியுள்ளார் சவீந்திர சில்வா. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, எந்த ஒரு பொதுமகனையும் சுட்டுக்கொல்லுமாறு தனக்குக் கட்டளையிடவில்லை என்றும் அவர் கூறுகிறார். மேலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையை போன்றே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கொல்லப்பட்டாராம். ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை எனவும் தொடர்ந்து கூறியுள்ள சவீந்திர சில்வா, தாம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடப் போகிறார் என வெளியான தகவலும் பொய் எனக் கூறியுள்ளார். Send To Friend இச் செய்தியை வாசித்தோர்: 1710

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் குண்டுவெடிப்பு ‐ மூவர் காயம்

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் காயமடைந்த மூவர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். கொழும்பு கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் இன்று மாலை 4.45 மணியளவில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மூன்று பாதசாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சமையில் எரிவாயு சிலின்டரே வெடிப்புக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகித்த போதும், குறித்த பகுதிக்கு வந்து நிலைமையினை பார்வையிட்ட தீயணைப்புப்படையினர் எரிவாயு சிலின்டர் வெடித்தற்கான அறிகுறி எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மிகவும் பதற்றத்துடன் காணப்பட்ட அப்பகுதி மக்கள் பொலிஸார் வருகையையடுத்து அமைதியடைந்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஏ-9 வீதியூடாக பயணம் செய்வதற்கு இனி வாகனங்களுக்கும் பாதுகாப்பு அனுமதி தேவையில்லை


யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 பாதை யூடாக பயணம் மேற்கொள்ளும் போது மக்களின் வாகனங்கள் நாளை திங்கட்கிழமை தொடக்கம் எந்தவித பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவை இல்லை.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு மீள்குடியமர்வு மற்றும் அபிவிருத்திக்குமான ஜனாதிபதி செயலணி யின் தலைவருமான பஸில் ராஜபக்ஷ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்ற உறுப் பினர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகை யில் அவர் இப்படிக் கூறினார்.
வடக்கில் இருந்து கொழும்பு வந்த வர்கள் எந்தவித பதிவுகளையோ அல்லது அது தொடர்பான நடைமுறைகளையோ இனிமேல் மேற்கொள்ளாமல் மீண்டும் அங்கு பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) பெறும் நடைமுறை கடந்த மாதம் முழுமையாக நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் ஏ 9 பாதையூடாக சுதந்திரமாகப் பயணம் மேற்கொள்ளலாம்.

Sunday, December 20, 2009

லண்டன் நகரை தகர்க்க பயங்கரவாதிகள் சதி

மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதைப் போல் இங்கிலாந்து தலைநகரமான லண்டனையும் தாக்க பயங்கரவாதிகள் மேற்கொண்ட சதியை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். கடந்த 2-ந் தேதி இணையதளங்கள் மூலம் பயங்கரவாதிகள் செய்து கொண்ட தகவல் பரிமாற்றத்தை ரகசியமாக கண்காணித்த ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர், அதன் முழு விவரத்தையும் சேகரித்தனர். அதில் மும்பை நகரில் நடத்திய தாக்குதலைப் போல் லண்டனிலும் நடத்துவது பற்றி செய்தி பரிமாறியது தெரியவந்தது. இதையடுத்து ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் லண்டன் நகருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிக்கிய ஆயுத விமானம்! - ஜெகத்கஸ்பர்

டிசம்பர் 13. நள்ளிரவு. எரிபொருள் நிரப்பியாகவேண்டிய தேவை நிமித்தம் இல்யுஷின் 76 ரக சரக்கு விமானம் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்-டன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய எச்சரிக்கைத் தரவுகளின் அடிப்படையில் சோதனை யிடப்பட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி. சுமார் 40 டன் அளவு எடை கொண்ட ஆயுதங்கள் நேர்த்தியாக மூட்டை கட்டி அடுக்கப்பட்டிருந்தன.


ஆயுதங்களின் விபரப்பட்டியலை தாய்லாந்து அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் கிடைக்கிற தகவல்களின்படி எறிகணைகள், எறிகுண்டுகள், இவற்றோடு நச்சுத்தன்மை கொண்ட ரசாயன அழிவாயுதங்களும் இருந்திருக்கிறது. அந்த ரசாயன நச்சு ஆயுதங்கள் தமிழருக்கெதிரான இன அழித்தல் போரில் சீனா சன்மானம் தந்து சிங்கள ராணுவத்தால் முல்லைத்தீவில் பயன்படுத்தப்பட்ட அழிவாயுதங்களைப் போன்றவை என்று கிடைத்துள்ள தகவல் முக்கியத்துவ மானது. மட்டக்களப்பு- அம்பாறை மின்னேரியா காடுகளுக் குள் முற்றுகையிடப்பட்டு நிற்கும் விடுதலைப் போராட்டத்தில் மிஞ்சிய போராளிகளை எளிதாக அழித்தொழிக்கவேண்டி அவசரமாக கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களோ என்ற ஐயத்தை இது எழுப்பியுள்ளது.


ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டது, வட கொரியாவில். அணு ஆயுதங்கள் உட்பட பல்வேறு அழிவாயுதங்களை உற்பத்தி செய்து பரிசோதித்துப் பார்க்கும் முக்கிய உலக நாடாக வடகொரியா இன்று திகழ்கிறது. வடகொரியாவின் உலகப் புரவலர், தாளாளர், அரசியற் பாதுகாவலனாக சீனா நாடு நிற்கிறது. அதே சீனாதான் இன்று ராஜபக்சே கும்பலுக்கும் புரவலர்- பாதுகாவலன் என்ற நிலையில், சீனாவின் ஏற்பாட்டில்தான் இந்த அழிவாயுதங்கள் இலங்கைக்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் என்ற ஐயம் வலுப்படுகிறது.


இந்த ஆயுதங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என இலங்கை அரசு வெளியிட்ட அவசர தன்னிலை விளக்கம் யதார்த்தத்தில் ஐயங்களை அதிகரிக்கவே செய்துள்ளது. இந்த ஆயுத விமானத்தின் அதிகாரபூர்வ பயண வழி அதனை உறுதி செய்கிறது. உக்ரைன் நாட்டு தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான இந்த விமானம் வடகொரியாவுக்கு ஆயுதம் ஏற்றிச் செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காய் அசர்பைஜான், எமிரேட்ஸ் நாடுகளில் தரையிறங்கியுள்ளது. வடகொரியாவில் ஆயுதங்களை ஏற்றிவிட்டு திரும்பி வரும் வழியாக தாய்லாந்து, ஸ்ரீலங்கா இரு நாடுகளையும் பயணவழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். உக்ரைன் நாடு இவ் ஆயுதங்களை தான் வாங்கவில்லையென அறிவித்திருக் கிறது. அவ்வாறே தாய்லாந்தும் அறிவித்துள்ளது. உண்மையில் இத்தகு அழிவாயுதங்கள் பயன் படுத்தும் நிலையிலோ, தேவையிலோ அந் நாடுகள் இல்லை. எனில் ஆயுத விமானத்தின் பயண வழியில் குற்றவாளிகளாக மிஞ்சி நிற்கும் ஒரே நாடு ஸ்ரீலங்காதான். சீனாவின் உதவியோடு ஸ்ரீலங்காவுக்காக இந்த அழிவாயுதங்கள் வட கொரியாவிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற தென்பதே புறச்சூழமைவுகள் காட்டும் உண்மை.


மட்டக்களப்பு-அம்பாறை மின்னேரியா அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் நிற்கும் புலிகளின் அணிகளை முற்றாக அழித்தொழிக்கும் நோக்குடன் கருணா-பிள்ளையான் கூலிப் படைகளின் உதவியோடு மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை யொன்று இப்போது நடந்துகொண்டிருப்பது பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். இந்நடவடிக்கையில் பயன்படுத்த வேண்டித்தான் வடகொரியாவிலிருந்து அழி வாயுதங்கள் வாங்கப்பட்டனவா என்ற கேள்வியும் இதனால் வலுவாக எழுகிறது.


முல்லைத்தீவு இறுதி யுத்தத்தின்போது முல்லைத்தீவு ஆனந்தபுரம் தென்னந்தோப்பில் நடந்த வரலாற்றுச் சமரில் புலிகளின் வியப்பூட்டும் எதிர்த் தாக்குதலை முறியடிக்க உதவிய அதே அழிவாயுதங்கள் -தீபன், விதுஷா, கடாஃபி போன்ற மகத்தான தளபதியர்களை காவு கொண்ட அதே ஆயுதங்கள்தான் இந்த விமானத்திலும் வந்து கொண்டிருந்ததாய் கதைக்கப்படுகிறது. தளபதி பால்ராஜ் ஓயாத அலைகள் நடத்திய வதிரையன் பாக்ஸ் சண்டையைப்போல் பன்மடங்கு சாகசங்கள் நடந்த ஆனந்தபுரம் தென்னந் தோப்பு சண்டை, அம்முற்றுகையை உடைத்து வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றிகரமாய் வெளியேறியது எப்படியென்ற மெய் சிலிர்க்கும் உண்மைகளை தமிழுலகம் அறியவேண்டும். அதனை பிறிதொரு தருணத்தில் பதிவு செய்வேன். ஆனால் அந்தக் களத்தில் பயன்படுத்திய அழிவாயுதங்களை இப்போது மீண்டும் பெற இலங்கை ராணுவம் முயன்றிருப்பது மின்னேரியா காடுகளில் நிற்கும் போராளிகளை ரசாயன ஆயுதங்கள் கொண்டு அழிக்கும் நோக்குடன்தான் என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது.




எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னாலும் இலங்கைக் குள் இனியொரு தமிழர் விடுதலை எழுச்சி பிறந்துவிடாதபடி ஆணிவேரின் அடி எல்லை சல்லி வேர் வரைக்கும் சென்று அழித்து முடித்துவிடவேண்டுமென்பதில் ராஜபக்சே-கோத்த பய்யா கும்பல் மிகவும் தெளிவான- மூர்க்கம் தணியாத முடிவில் தொடர்ந்து இயங்குவதாகவே விஷயமறிந்த பலரும் கூறுகிறார் கள். மின்னேரியா முற்றுகை மட்டுமல்லாது வேறு பல நடவடிக்கை களையும் ராஜபக்சே கும்பல் செய்து வருவதாய் சொல்லப்படுகிறது.


ராணுவ மொழியில் ""காடுகளை தூய்மை செய்தல்'' என்பார்கள். வன்னிக்காடுகள்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாய்மடி, தெய்வமடி என்பது அவர்களுக்குத் தெரியும். முல்லைத்தீவு காடுகள் எங்கிலும் ராணுவத்தின் சிறப்பு அணிகள் விரிந்து பரந்து, சிறு சிறு குழுக்களாக ஒருங்கிணைய முயன்றுவரும் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாய் இயங்கி வருவதாய் கூறப்படுகிறது. வன்னிக்காடுகளை தூய்மை செய்துவிட்டால் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கு நித்திய தடை நிகழ்த்திவிட முடியுமென்பது அவர்களின் கணக்கு.

முல்லைத்தீவு காடுகளுக்குள் இலங்கை ராணுவம் எதிர்பார்த்த அளவிலான விடுதலைப்புலிகளை காண முடியாததால், அவர்கள் ஒருவேளை அம்பாறை காடுகளுக்குள் மின்னேரியாவை நோக்கி நகர்ந்திருப்பார்களோ என ராணுவம் சந்தேகிக்கிறது. இப்போதைய பெரும் ராணுவ நகர்வுக்கு அதுவும் ஓர் முக்கிய காரணம்.
ஆக, மின்னேரியா காட்டுப் பகுதிகளில் யார் தலைமையில் புலிகள் நிற்கிறார்கள் என்பதிலும்- புலிகள் நிற்கிறார்கள் என்பது முக்கிய செய்தியாக விடிகிறது. கேணல் ராம் தொடர்பான கடந்த இதழைப் படித்தபின் பல திசைகளிலிருந்து பலவிதமான தரவு கள் வந்தன. கேணல் ராம் ராணு வத்தால் கைது செய்யப்பட்டது உண்மையே என்றும், அதற்கு உதவி புரிந்தவர்கள் புலிகளின் ராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி இப்போது துரோகியாய் மாறியுள்ள பிரபா குழு என்றும், ராமுடன் கைது செய்யப்பட்டவர்களை சித்ரவதை செய்து அவர்களைப் பயன்படுத்தி ராமுக்கு வலதுகரமாய் நின்ற தளபதி நகுலனையும் கைது செய்துவிட்டார்கள் என்றும் ஒரு தரப்பு தரவுகள் வந்து குவிந்தன. அதற்கு நேர்மாறான தரவுகள் பிறிதொரு தரப்பிடமிருந்து வந்தன. கேணல் ராம் ராணுவத்துடன் இணைந்துவிட்டதாய் முன்பு வந்த செய்திகளின் பின்னணியில் உண்மையில் நடந்தது என்னவென்றால் -காயமுற்றிருந்த ஒரு தொகுதி போராளிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க காட்டுக்குள் இருந்து கொண்டு கருணா குழுவின் உதவியை நாடினார்கள். அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கேணல் ராம் மற்றும் உடன் நின்ற தளபதியர்களை முற்றுகையிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள். முன்பு நாம் கூறியதுபோல் எது உண்மை, எது பொய் என்பதை காலம் தெளிவுபடுத்தும். ஆனால் இன்றைய நிலையில் ஒன்று மட்டும் தெரிகிறது. புலிகள் முற்றாக அழிந்துவிடவில்லை. இன்னும் அவர்கள் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள். மின்னேரியா காடுகளில் மட்டுமல்ல -உலகின் பல்வேறு பகுதிகளிலும்.
மின்னேரியா முற்றுகையை புலிகளின் எஞ்சிய அணிகளால் தாக்குப்பிடிக்க முடியுமா என கொழும்பு நகரிலுள்ள தமிழ் ஆய்வாளர் ஒருவரை தொலைபேசி உரையாடலின்போது கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில் : ""நாம் கதைப்பது போல் எளிதானதல்ல. உணவு, மருத்துவ சிகிச்சை, பொது மருந்து தேவைகள், ஆயுத-எரிபொருள் சப்ளை ஆகியவை அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். கசப்பானதோர் நிஜம் என்னவென்றால் ராணுவ முற்றுகை நீடிக்கும் காலம்வரை தீயில் வெந்த உணவை அவர்கள் உண்ண முடியாது. நெருப்புப் புகை, இருக்கும் இடத்தை எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். மற்றபடியும் வெளியிலிருந்து அரிசி போன்ற உணவுப் பொருட் களை அடர்ந்த காட்டுக் குள் கொண்டு செல்வதும் இன்றைய நிலையில் அவர்களால் இயலாத காரியம். காட்டு விலங்குகளின் பச்சைக்கறியும், இலைகளும் உண்டுதான் உயிர்வாழ வேண்டும்'' என்றார்.
கிளிநொச்சியில் நான் நின்றிருந்த நாட்களில் சிறப்பு அதிரடிப்படையணியின் தளபதியொருவர் கூறியது என் நினைவுக்கு வந்தது : ""காட்டுக்குள் முற்றுகையிடப்பட்ட நிலையில் போராடுவதென்பது அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே புரியும். புற்பூண்டுகளை மட்டும் தின்று வாழ்கின்ற நாட்களாய் சில அமையும். குடிநீர்கூட கிடைக் காது. காட்டுத்தேனை வடித்தெடுத்து , மரங்கொத்தி மரத்தில் துளையிடுவது போல் பெரிய மரங்களில் துளையிட்டு, மான்-மிளா போன்ற விலங்குகளை வேட்டையாடி கறித்துண்டு களாக்கி அம் மரப்பொந்துகளில் தேனையும் கறித்துண்டு களையும் இட்டு நிரப்பி மூடிவிடுவோம். இரண்டு மாதங்கள் கடந்து எடுத்து உண்டால் தேவாமிர்தம்போல் இருக்கும். முக்கியமாக ஒரு நாளைய உடல் சக்தி தேவைக்கு ஓரிரு துண்டுகள் சாப்பிட்டாலே போதும்'' என்றார்.
காடுசார் சிறப்பு நடவடிக்கைகளுக்கான அத்தளபதி தன் உரையாடலினூடே குறிப்பிட்ட மறக்க முடியாத வரிகள் இதனை எழுதுகையில் என் கண் முன் விரிகின்றன: ""காடுகளுக்குள் அப்படிக் கஷ்டப்பட்டு, சகல துன்பங்களையும் உள்வாங்கி முறுக்கேறும் புலிகள்தான் வெளியே முனைக்கு வரும்போது சூறாவளியாய் சுழல்வார்கள், வெயிலோடு கரைவார்கள், இரவோடு விழிப்பார்கள், கடற்புயலோடும் களமாடுவார்கள்.'' ஆம் அம்பாறை, மணலாறு, மின்னேரியா காடுகளில் புடமிடப்பட்டு முறுக்கேறும் புலிகள் ஒவ்வொருவரும் ஒருநாள் கேணல்களாய், பிரிகேடியர்களாய் வெளியே வருவார்கள்.




காங்கிரஸில் இணைகிறார் விஜயயகாந்த்!

""ஹலோ தலைவரே.. .. இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்து, யார் ஜெயிக்கப் போறாங்கங்கிற ரிசல்ட்டுக்காக 2 தொகுதிகளும் காத்துக்கிட்டிருக்குது.''
""கணிப்புகள், எதிர்பார்ப்புகள்னு அரசியல் வட்டாரம் பரபரப்பா இருக்குமே...''
""கணிப்புகள், எதிர்பார்ப்புகள்னு அரசியல் வட்டாரம் பரபரப்பா இருக்குமே...''
""ஆளுங்கட்சிக்குள்ளே நடக்கும் லீடிங் போட்டி இருக்கட்டும். இவங்க ரெண்டு பேரோட கணிப்பையும் காலி பண்ணனும்ங்கிற வேகத்தோடு, எதிர்த்தரப்பான அ.தி.மு.கவும் வேகம் காட்டுமே?''
""திருச்செந்தூர் தொகுதிக்கு செங்கோட் டையன் பொறுப்பாளர். வந்தவாசி தொகுதிக்கு தம்பிதுரை பொறுப்பாளர். இரண்டு தரப்பிலுமே வெற்றியைவிட, தோல்விக்கான ஓட்டு வித்தி யாசத்தைக் குறைக்கணும்ங்கிற கால்குலேஷன்தான் அதிகமா இருக்குது. செங்கோட்டையன் பொறுப்பில் இருக்கும் திருச்செந்தூரைவிட வந்தவாசியில் ஓட்டு வித்தியாசம் கம்மியா இருக்கணும்னு தம்பிதுரை கணக்குப் போட, அவர் தொகுதியைவிட நம்ம தொகுதியில் ஓட்டு வித்தியாசம் கம்மியா இருக்கணும்னு இவர் கணக்குப் போடுறார்.''
""யார், யார் கணக்குகளுக்கு மக்கள் மார்க் போட்டிருக்காங்கிறது 23-ந் தேதி காலையில் தெரிஞ்சிடும்ப்பா. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தோட கணக்கு என்ன? தேர்தலில் தனியா நின்னுட்டு, பிரச் சாரத்தில் கூட்டணி பற்றியெல்லாம் பேசிக்கிட்டிருந்தாரே? என்னவாச்சாம் அவருக்கு?''
""இரண்டு தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் விஜயகாந்த் ரொம்ப டென்ஷனாகவே இருந்தாருங்க தலைவரே... அரசியல் அனுபவத்தில் பெரியவங்களைகூட ஏகவசனத்தில் அவர் பேச, அவர் கட்சிக்காரங்களே நம்ம தலைவருக்கு என்னாச்சுன்னு முணுமுணுத்திருக்காங்க. விஜயகாந்த் பிரச்சாரம் செய்த இடங்களில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. தொண்டர்களும் ஆர்வத்தோடு வேலை பார்க்கலை. கட்சி நிர்வாகிகளும் சைலண்ட் ஆயிட்டாங்க. அதனால, திருவண்ணாமலை மா.செ.வைக்கூட மாற்றிப் பார்த்தார். அப்பவும் தேர்தல் வேலைகளில் வேகம் எடுக்கலை. கட்சிக்காரங்களுக்கு நம்பிக்கை கொடுக்க ணும்ங்கிறதுக்காகத்தான், தனியா ஓட்டுக் கேட்கப் போன இடத்தில் கூட்டணி அமைப்போம்னு பேசினார்.''
""தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகள்கிட்டே இந்த கணக்கு பற்றி கேட்டேங்க தலைவரே... விளக்கமா சொன்னாங்க. கட்சி ஆரம்பிக்கிறதுக்காக நடத்திய மாநாடு, அதற்கப்புறம் சட்ட மன்றத் தேர்தல், உள் ளாட்சித் தேர்தல், எம்.பி. தேர்தல், இடையிடையே இடைத்தேர்தல், அப்புறம் இளைஞரணி மாநாடுன்னு தொடர்ச்சியா செலவுதான். எல்லாத்துக்கும் காசை செலவு பண்ணி எந்த வெற்றியும் இல்லாமல் கட்சி நிர்வாகிகள் சோர்ந்து போயிட்டாங்க. புதுசா கட்சிக்கு வந்த பணக்காரப்புள்ளிகளும் எம்.பி. தேர்தலில் நின்னு செலவழிச்சதிலேயே நொந்து போயிட்டாங்க. எம்.பி. தேர்தல் சமயத்திலேயே கூட்டணி அமைக்கணும்ங்கிற குரல் தே.மு.தி.க. நிர்வாகிகளிடமிருந்து பலமா வெளிப்பட்டது.''
""பண்ருட்டி ராமச்சந்திரனும் சுதீஷும் டெல்லிவரைக்கும் போனாங்களே...''
""அப்பவே காங்கிரசோடு கூட்டணி சேர்ந்திருந்தா 4 எம்.பி, ஒரு மினிஸ்டர் பதவி தே.மு.தி.கவுக்கு கிடைச்சிருக்கும்னு கட்சிக்காரர்கள் இப்பவும் சொல்லிக்கிட்டுத்தான் இருக்காங்க. இதற்கு முன் நடந்த 5 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாததால, 25%க்கு மேலே ஓட்டு வாங்கி, இரண்டாவது இடத்தைப் பிடிச்சி, அதை வச்சே சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி பேசலாம்னு விஜயகாந்த் கணக்குப் போட்டிருந்தாரு. ஆனா, அந்தளவுக்கு ஓட்டு கிடைக்கலை. இதுவும் தொண்டர்களை சோர்வாக்கிடிச்சி. இனி கட்சியை நிமிர்த்தணும்னா கூட்டணிதான் வழின்னு கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சொல்லிக்கிட்டிருந்தாங்க. திருச்செந்தூருக்குப் பிரச்சாரத்துக்குப் போன விஜயகாந்த்கிட்டேயே இதைக் கட்சிக்காரர்கள் சொல்லிட்டாங்க. நெருக்கடி அதிகமாவதைப் புரிஞ்சுக்கிட்டுத்தான் கூட்டணின்னு பேசியிருக் கிறார்.''
""தி.மு.க.வோடு தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வாய்ப்பேயில்லை. அ.தி.மு.க.வோடு பேசப்பட்ட கூட்டணி பேரங்களும் இதுவரைக்கும் சரிப்படலை. முதல்வர் கனவோடு பேச வர வேணாம்னு போயஸ் கார்டனிலிருந்து சொல்லப் பட்டிருக்குது. அப்படின்னா விஜயகாந்த்துக்கு இருக்கிற ஒரே வழி, தி.மு.க. கூட்டணியில் இருக்கிற காங்கிரசை தன் பக்கம் இழுப்பதுதான். அதற்கான மூவ் நடக்குதா?''
""யாரை யார் இழுக்குறாங்க அப்படிங் கிறதுதான் ஹைலைட்டான மேட்டருங்க தலைவரே... காங்கிரசில் கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்கக்கூடியவர் சோனியாதான். அதே நேரத்தில், 2011 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கு வியூகம் வகுத்து முன்னெடுக்கப் போகிறவர் ராகுல்காந்தி. தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டணி சேரலாம்னு ஐடியா பண்ணிய நடிகர் விஜய்கிட்டே, நீங்க காங்கிரசில் சேர்ந்திடுங்கன்னு சொல்லியிருந்தார் ராகுல். விஜய காந்த் விஷயத்திலும் ராகுலோட நிலை அதுதானாம்.
''""ஓ...''
""போன வாரத்தில் ராகுல் தன்னோட ஆக்ஷன் டீமோடு தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசியிருக்கிறார். விஜய காந்த் முதல்வர்ங்கிற கண்டிஷனை ஏற்கமுடியாது. இந்தியா முழுக்க காங்கிரஸ் முதல்வர்களை உருவாக்க ணும்ங்கிறதுதான் நம்ம எய்ம். தமிழ்நாட்டில் மட்டும் விதி விலக்கா செயல்படமுடியுமா? விஜயகாந்த் தன்னோட கட்சியை காங்கிரசில் சேர்த்தால், அவரை முதல்வர் கேண்டிடேட்டா முன்னிறுத்துவது பற்றி ஆலோ சிக்கலாம்னு சொல்லியிருக்கிறார். விஜயகாந்த்தை காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டு வர விரும்பும் தமிழக கதர்ச்சட்டைகள் இருவர் மூலம் ராகுலின் ஐடியா, விஜயகாந்த்கிட்டேயே பக்குவமா சொல்லப்பட்டிருக்குது. முதல் தேர்தலிலேயே ஓஹோன்னு ஜெயித்த த.மா.கா.வோட நிலைமை என்னாச்சு! தனிச்சு நின்னீங்கன்னா அடுத்த தேர்தலில் உங்க கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்களே இருக்க மாட்டாங்க. காங்கிரசில் தே.மு.தி.க.வை இணைத்துவிட்டால் நிதி நெருக்கடி பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம். உங்க கட்சியிலிருந்து வர்றவங்களுக்கு மரியாதை கிடைக்கும். பொறுப்புகளும் கொடுக்கப்படும். வீம்புக்கு தனியா நின்னு ஓட்டு சதவீதம் குறைஞ் சுக்கிட்டே போனா இந்த வாய்ப்பும் கிடைக்காதுன்னு சொல்லியிருக்காங்க.''
""விஜயகாந்த் என்ன சொன்னாராம்?''
""அவர் தரப்பிலிருந்து, காங்கிரஸ்-தே.மு.தி.க. கூட்டணி அமைத்து தொகுதிகளை சமமா பங்கிட்டுக் கொண்டு போட்டியிட்டு, யார் அதிக இடங்களைப் பிடிக்கிறாங்களோ அவங்களுக்கு முதல்வர் பதவிங்கிற ஃபார்முலா மறுபடியும் சொல்லப் பட்டிருக்குது. அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கலையாம். காங்கிரசுடன் தே.மு.தி.க. இணைப்புங்கிறதுதான் அவங்க டெல்லியின் ஒரே சாய்ஸ். தொண்டர்களிடமிருந்து நெருக்கடி அதிகரித்திருப்பதால் காங்கிரசில் சேருவது பற்றி விஜயகாந்த் சீரியஸா யோசிக்க ஆரம்பித்திருக் கிறார்னு அவ ருக்கு ஆலோ சனை சொல் லும் இடத்தில் உள்ளவர்கள் சொல்றாங்க தலைவரே...''
""இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அடிக்கடி டெல்லிக்கு வருவதும், அப்படி வரும்போதும் போகும்போதும் சென்னை விமான நிலையத்தில் குரல் கொடுப்பதுமாக இருக்கிறாரே... விசிட்டின் நோக்கம் என்னவாம்?''
""முன்னேயெல்லாம் 3 மாசத்துக்கு ஒரு முறை அவர் இந்தியாவுக்கு வந்துபோவது வழக்கம். ஆனா, போருக்குப்பின்னாடி அடிக்கடி வருகிறார். அதிலும் இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த ஒரு மாத இடைவெளியில் 2 முறை இந்தியாவுக்கு வந்துவிட்டார். இலங்கைத் தேர்தலில் இந்தியா கூர்ந்து கவனம் செலுத்து வதுதான் இதற்கு காரணம். சீனாவுக்கு ஆதரவான ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா நிற்கிறார். தேர்தலில் அவர் ஜெயித்தாலும் ரணில் கையில்தான் பவர் இருக்கும்னு இந்தியா நினைப்பதா ரணில் தரப்பு சொல்லுது.''""இந்த விசிட்டில் டெல்லியில் யாரை சந்தித்தாராம் ரணில்?''""வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைத்தான் சந்தித்தார்.
பொன்சேகாவுக்கு இந்தியாவின் ஆதரவு இருப்பதை உறுதி செய்துகொண்ட ரணில், ஈழத்தமிழர்களின் இப்போதைய கவனமெல்லாம் மறுகுடியேற்றத்தில்தான் இருக்கிறது. இந்த விஷயத்தில் ராஜபக்சே அரசு சரியா செயல்படலைங்கிற கோபம் அவர்களுக்கு இருப்பதால், தமிழர் பகுதிகளில் பொன்சேகாவுக்கு ஆதரவு கிடைக்கும்னு சொல்லியிருக்கிறார். தமிழர் கட்சிகள் தனி வேட்பாளரை நிறுத்துகிறதா, அவற்றின் நிலைப்பாடு என்னங்கிறதையெல்லாம் இந்தியத் தரப்பு உன்னிப்பா விசாரித்ததாம்.''

காமுக சாமியாரின் சிங்கப்பூர் லீலைகள்!



வேலை கேட்டுப் போன இளம்பெண் ஹேமலதாவை மயக்கி, ஆபாசப்படம் எடுத்து, தொடர்ந்து அவரை தனது வக்கிர வடிகாலாகப் பயன்படுத்திக்கொண்ட ஈஸ்வர ஸ்ரீகுமார் சாமியார் குறித்தும்...


அவர்மீது ஹேமலதா கொடுத்த புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் 3 மாதங்களுக்கு மேலாய் இழுத்தடித்த காக்கிகள் குறித்தும்... "காமுக சாமியாரின் வீடியோ! கதறும் அபலைப்பெண்' என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக "டிச.16' நக்கீரன் இதழில் தந்திருந்தோம்.


இந்தக் கட்டுரையைப் பார்த்த சிட்டி கமிஷனர் ராஜேந்திரன் அதிரடியாகக் களமிறங்கி... விசாரித்ததோடு ஹேமலதா புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர். போடப்படாததை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வார்ன் பண்ணினார்.இதைத் தொடர்ந்து தி.நகர் உதவி கமிஷனர் கண்ணபிரானின் மேற்பார்வையில் மாம்பலம் இன்ஸ்பெக்டர் சரவணன், சாமியார் ஈஸ்வரகுமார் மீது எஃப்.ஐ.ஆரை பதிவு செய்தார்.


அதுவரை பெரிதாக புகார் குறித்து அலட்டிக்கொள்ளாமல் இருந்த சாமியார் ஈஸ்வரகுமார், குபீரென எஸ்கேப் ஆனார். தலைமறைவு நிலையிலேயே அவர் முன்ஜாமீனுக்கு முயல... கோர்ட்டோ தள்ளுபடி பண்ணிவிட்டது.


இதைத்தொடர்ந்து "இனி முன்ஜாமீன் போடவேண்டாம்.

தலைமறைவும் ஆகவேண்டாம். இப்படிச் செய்வது குற்றத்தை ஒப்புக்கொண்டதுபோல் ஆகிவிடும்' என ஈஸ்வர குமாருக்கு அவரது வழக்கறிஞர்கள் அட்வைஸ் செய்ய...

மறுபடியும் நண்பர்கள் மத்தியில் தலைகாட்ட ஆரம்பித்தார் அவர்.இந்த நிலையில் ஈஸ்வர குமாரின் மனைவி லலிதா நம்மிடம்,

""என் கணவர் துறவி அல்ல, குருஜிதான். அவருக்கு குடும்பம் இருக்கிறது. அவர் பெண்களிடம் தவறு செய்யக்கூடியவர் அல்ல. அப்படி யிருந்தால் நானே அவரை போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடுவேன். அந்த ஹேமலதா சரியான பெண் அல்ல'' என்றார் குமுறலாய்.நாமோ...

""சிங்கப்பூர் போலீஸ் உங்கள் குடும்பத்தை யே 27 நாட்கள் தங்கள் கஸ்டடியிலேயே வைத்திருந்ததாகச் சொல்கிறார்களே... அதிலும் பெண் தொடர்பாக சாமியார் நடத்திய லீலைகள் தொடர்பான புகார்தான் என தகவல் வருகிறதே'' என்றோம் அவரிடமே.சாமியாரின் மனைவி லலிதாவோ... ""அதுபற்றி இப்போது பேசத்தேவையில்லை.

இந்த வழக்குக்குத் தேவையில்லாத விவகாரம்'' என முடித்துக் கொண்டார். இதற்கிடையே புகார் தந்த ஹேமலதாவை 17-ந் தேதி மதியம் விசாரணைக்கு அழைத்த மாம்பலம் போலீஸார், பெண் காக்கிகள் முன்னிலையில் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி...

ஹேமலதா கொடுத்த பதில்களை பதிவு செய்தனர்.இதில் மேலும் பல அதிரடிப் புகார்களை ஹேமலதா, சாமியார் மீது சொல்லியிருக்கிறார் என காவல்துறைத் தரப்பிலிருந்தே தகவல் கசிய... நாம் இதுகுறித்து ஹேமலதாவிடமே கேட்டோம்.
அவரோ...""நான் கொடுத்த புகார்ல சாமியாரின் வக்கிரங்கள் முழுவதையும் என்னால் விவரிக்க முடியலை. ஆனா பெண் போலீஸ்காரங்க துருவித் துருவிக் கேட்க... அவன் பண்ணிய அத்தனை அசிங்கங்களையும் சொல்லிட்டேன். அதில் கொஞ்சத்தைத்தான் உங்க ளிடம் பகிர முடியும். வேலை கேட்டுப்போன என்னை மயங்கவச்சி படம் எடுத்தவன்... அந்தப் படத்தை உன்னிடமே கொடுத்துடறேன் வான்னு கூப்பிட்டு பலமுறை நாசம் செஞ்சான். வரமுடியாதுன்னு சொன்னா... இண்டர்நெட்ல என் படங்களைப் போடறதா மிரட்டுவான். சிலநேரம்... யாராவது ரவுடிகளை வச்சி... "ஏய் நீ என்ன பத்தினித்திலகமா... சாமியார் கூப்பிட்டா வந்துட்டுப் போக வேண்டியதுதானே. நீ வராட்டி நாங்க வீடு பூந்து தூக்கிட்டுப் போவோம். அப்ப நாங்களும் தொடுவோம்னு கேவலமா மிரட்ட வைப்பார்.பயந்துபோய் அவனை சந்திப்பேன். அவன், வரும்போதே யார்ட்டயாவது சொல்லி
"ராயல் சேலஞ்ச்' விஸ்கி வாங்கி அதை எடுத்துட்டு வான்னு நிர்பந்தம் பண்ணுவான். அடையாறு வீட்டுக்கும் தி.நகர் இந்தி பிரச்சார சபா தெரு அபார்ட்மெண்ட்டுக்கும் மாறி மாறி கூப்பிடுவான். அங்க போனதும் என் கையாலேயே மதுவை ஊற்றிக்கொடுக்கச் சொல்லி குடிப்பான்.
பிறகு என் உடைகளில் கை வைப்பான். அப்புறம் முரட்டுத்தனமா கண்டபடி நடப்பான். விதவிதமா... என்னையும் ஈடுபடும்படி வற்புறுத்தி அடிப்பான். அதேபோல் ஆபாசப் படங்களை டி.வி.யில் ஓடவிட்டு அதேபோல நடந்துக்குவான். கதறினாலும் விடமாட்டான். சிலநேரம் அடிச் சித் துன்புறுத்துவான். நான் தேம்பி அழுதாதான் அவனுக்கு சிலநேரம் மூடே வரும். இண்டர்நெட்ல என் படம் வந்துடக் கூடாதேங்கிற ஒரே பயத்தில் இவ்வளவுநாள் அவன் கொடுமைகளைப் பொறுத்துக்கிட்ட நான்... ஒருகட்டத்தில் அவனோட வக்கிரங்களுக்கு ஈடுகொடுக்க முடியாம தற்கொலை பண்ணிக்கக்கூட முடிவு செஞ்சேன்.
செத்தா என் ஒரே மகன் அனாதையாயிடுவானேன்னுதான் அந்த முடிவை கைவிட்டுட்டு போலீஸுக்குப் போனேன்.நீ எங்க போனாலும் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் மினிஸ்ட்ரி ஆப் லேபர்ல மெம்பர். கடலோர பாதுகாப்புப் படையில் ஆலோசகரா இருக்கேன்.
பெரிய பெரிய அதிகாரிகள் என் கைல இருக்காங்க. என் சங்கரமடத் தொடர்புகள் பத்தி யெல்லாம் உனக்குத் தெரியாது. நீ கொடுக்கும் புகார்கள் என் கைக்கே வரும்னு பலவாறா மிரட்டினான்.
அதேபோல் நான் போலீஸில் கொடுத்த புகார்களை அவன் கையில் வச்சிக்கிட்டு வாசிச்சிக் காட்டு வான். இப்படி, தன் செல்வாக்கை பலமா வளர்த்துக்கொண்டு என்னைப் போன்ற அப்பாவிகளை நாச மாக்குறதுதான் அவன் பொழுது போக்கு. சிங்கப்பூர்ல இவன் வீட்டில் வேலை பார்த்த லூஸிங்கிற கேரளப் பெண்ணை ஆபாசப் படம் எடுத்து பலமுறை நாசமாக்கியிருக்கான்.
அந்தப் பொண்ணு தற்கொலை பண்ண... இதில்தான் சிங்கப்பூர் போலீஸில் இவன் சிக்கினான். இந்தியா வந்த பிறகு பாக்யாங்கிற இளம் பெண்ணை நாசப்படுத்தினான். அவளும் தற்கொலைபண்ணிக்கிட்டா. இதேபோல் நானும் சைலன்ட்டா செத்துப் போயிடுவேன்னு நினைச்சான்.
நான் இனி சாகப் போறதில்லை. அவனோட முகமூடியைக் கிழிச்சி அவனை சிறைக்கு அனுப்பாம நான் ஓயப்போறதில்லை'' என ஆவேசம் வந்தவர்போல் கொந்தளித்தார்.
வழக்கு விசாரணை தீவிரத் திசையில் போகத்தொடங்க... தப்பிக்கும் உபாயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார் சாமியார் ஈஸ்வரகுமார்.

வேட்டைக்காரன்:விஜய் ஏன் இப்படி சர்ர்ர்ர்றுக்கினார்

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் பாட்ஷா. அதை எப்படி சுமாராக கொடுப்பது என்று ரொம்ப யோசித்து ’வேட்டைக்காரன்’ ஆக்கியிருக்கிறார்கள்.
அப்படியே பாட்ஷா மாதிரி இருக்கு என்று சொல்லிவிடக்கூடாது என்றும் யோசித்திருக்கிறார்கள்.


அதனால் தெலுங்கில் ரவிதேஜா-அனுஷ்கா நடித்த விக்ரமாகுடு படத்தில் கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள்.



அபோகலிப்டா படத்தில் இருந்து கொஞ்சம்(என்கவுண்டரில் இருந்த தப்பிக்க அருவியில் குதிக்கும் காட்சி) சுட்டிருக்கிறார்கள்.
அப்புறம், வழக்கமாக மசாலாப்படங்களில் பார்த்து வரும் பல காட்சிகள்தான் திரைக்கதை.



முப்பது வருசத்துக்கு முன்பு எடுத்த மாஸ் ஹீரோ அறிமுகமாகுற காட்சியை இன்னமும் எடுத்துக்கிட்டு இருக்குறாங்க. விஜய் அறிமுகமாகும் காட்சியும் அப்படித்தான்.


முதல் நாள் முதல் காட்சி. ஒரு பாட்டுக்கு கூட ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கவில்லை. கரிகாலன் காலப்போல....என்று பாட்டு வருவதற்குள்ளாகவே தம்மடிக்க கிளம்பிட்டாங்னா.
நான் அடிச்சா தாங்கமாட்ட..என்று விஜய் பாடுவது பொறுத்தமாக இல்லை. அவர் உடல் வாகுவிற்கு இந்த பாடலைப்பாடுவது தமாஸ் ரகம்ங்னா. இதுல வேறு அவரது மகன் அந்த பாட்டைப்பாடி கொஞ்சம் ஆடுகிறார். அவருக்கே பொறுத்தமா இல்லேன்னா இவருக்கு?பின்னனி இசையின் போது விஜய் ஆண்டனிக்கு என்ன நடந்திருக்கும்? மனுசர் ஏன் இப்படி சொதப்பியிக்கிறார். சண்டைக்காட்சியில் சோக கீதம் வாசிக்கிறார்.
’உலகம் எப்பவும் பயப்படுவதற்கு தயாராக இருக்கு..பயமுறுத்தவன் இருந்துகிட்டுதான் இருப்பான்’, ’இது அரசு முத்திரை..இதுல மை தடவி பேப்பர்ல குத்துங்க..மக்கள் வயித்துல அடிக்காதீங்க’, என்று நச் வசனங்கள் இருக்கு. ஆனால் வெகு நீ..................ளமான வசனங்கள் தான் அதிகமாக இருக்கிறது.
அந்த வசனத்திற்கெல்லாம் வாயை ஆ!என்று பிளக்கிறார்கள். வசனத்திற்கு மட்டுமல்ல நிறைய காட்சிகளுக்கும் கொட்டாவி பறக்கிறது.
விஜய் ரொம்ப இளமையாக தெரிகிறார். அதனால்தான் அனுஷ்கா விஜய்க்கு அக்கா மாதிரி தெரிகிறார். ஆனால் இவரின் கிளாமர்தான் வறண்ட பாலைவனத்தில் ஆறுதலான நீறூற்று.
கொச்சின் ஹனிபா டயலாக் டெலிவரியில் கொஞ்சம் கலகலக்க வைக்கிறார். மனோபாலா சாஜிஷிண்டேவிடம் பேட்டி எடுத்து கலகலக்கவைக்கிறார். பள்ளித்தோழன் சத்யன் கொஞ்சம் கடிக்கிறார். கல்லூரித்தோழன் ஸ்ரீநாத் கடித்து குதறுகிறார்.


பல அட்டம்ப்ட்டுக்கு பிறகு +2வில் பாசாகி அப்புறம் காலேஜூக்கு விஜய் போகும் போதுதான் தியேட்டரே கலகலக்கிறது. ஆனால் கதைப்படி இது சீரியஸான காட்சி.
பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ ஓட்டுவது போல் இதிலும் ஆட்டோ ஓட்டுகிறார் விஜய். ரஜினி ஆட்டோ ஓட்டி தங்கைகள், தம்பியை படிக்க வைப்பார்.
இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதற்காகத்தான் விஜய் ஆட்டோ ஓட்டி அந்த வருமானத்தில் தானே படிக்கிறார்.


பாட்ஷா படத்தில் ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடலுக்கு படிக்கட்டுகளில் இருந்து ஸ்டைலாக இறங்குவார் ரஜினி. காரில் ஒரு ஓரமாக ஸ்டைலாக அமர்ந்து சாலையை லுக் விடுவார்.
இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதனால்தான் புலி உறுமுது புலி உறுமுது பாடலுக்கு படிக்கட்டுகளில் ஸ்டைலாக ஏறுகிறார் விஜய். காரில் நடுவில் அமர்ந்து லுக் விடுகிறார்.
போலீஸ் அதிகார் ஷாயாஜிஷிண்டே, வில்லன் ஜிந்தா கலக்கியிருக்கிறார்கள். தன் சின்ன வீட்டை ஜிந்தாவின் மகன் அபகரித்துவிட அதுவரை ஜிந்தாவுக்கு ஜால்ரா அடித்தவர் விஜய் பக்கம் வந்துவிடுகிறார்.
ஏகப்பட்ட ரவுடிகள், ஏகப்பட்ட அடிதடிகள் இருந்தாலும் அரிவாள், ரத்தம் இல்லாதது ஆறுதல் (இருக்கு ஆனா இல்ல). சத்யனை கொன்று அட்டைப்பெட்டிக்குள் வைத்து அனுப்பினாலும் அவ்வளவாக நெஞ்சை பிசையவில்லை.

வேட்டைக்காரன் நல்ல கதைதான். ஆனால் வேட்டையாடிய விதம் சரியில்லை. நேர்மையான போலீஸ் அதிகாரி தேவராஜ் மாதிரி தானும் ஆகவேண்டும் என்று லட்சியம் வளர்க்கிறார் விஜய். தேவராஜ் எப்படியெல்லாம் உயர் அதிகார் ஆனாரோ அதே மாதிரி தானும் வரவேண்டும் என்று துடிக்கிறார் விஜய். அவர் மாதிரி ஆகும் வரை பொறுத்திருக்காமல் நல்ல விசயங்களை அங்கங்கே தட்டிக்கேட்கிறார்.
ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் தேவராஜ் குடும்பத்தை அவரின் கண்ணெதிரிலேயே எரித்துவிடுகிறார்கள்.
இத்தீவிபத்தில் தேவராஜின் கண்பார்வையும் போய்விடுகிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்.
அதனால் சென்னையில் வழக்கம் போல் ரவுடியிசம் தலைதூக்கிறது. அதை தட்டி தரைமட்டமாக்கும் விஜய்க்கு ’எனக்கொரு மகன் இருந்தால் என் பதவி அவனுக்கு கிடைக்கும். உன்னை என் மகனாக நினைக்கிறேன். நீ இனிமேல் பதவியில் இருந்துகொண்டு தைரியமாக தட்டிக்கேள்’ என்று விஜய்க்கு பதவி கிடைக்க செய்கிறார் தேவராஜ்.க்ளைமாக்ஸ்.
பால் அபிஷேகம், சரவெடி, குதிரையில் ஊர்வலம், கரகாட்டம், கச்சேரி என்று தியேட்டருக்கு முன்பு அமர்க்களப்படுத்திய ரசிகர்கள் தியேட்டருக்குள் ஒரு சில (இடங்களைத் தவிர) கடைசி வரை கப்சிப் என்று இருந்தார்கள். கொட்டாவியின் அடுத்தகட்டத்துக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது.
அரசியல் பிரவேச நேரத்தில் அதிரடியாய் வந்து ரசிகர்களை உசுப்பேத்த வேண்டிய விஜய், ஏன்
இப்படி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றுக்கினார்.