பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, November 28, 2009

சந்தர்ப்பம் கிடைத்தால் கோத்தபாயவை விசாரணை செய்வேன் - சரத்

யுத்தத்தின்போது அரச படைகளுக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததில் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்பட்டதையடுத்து, அரசாங்கம் தாம் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள Hicorp நிறுவனத்தினூடாக வாங்கப்பட்ட ஆயுதங்கள் குறித்தே விசாரணை செய்யவுள்ளதாக அரசு கூறியுள்ளது.
இந்த நிறுவனமானது சரத் பொன்சேகாவின் மருமகன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே இந்நிறுவனமூடாக ஆயுதக் கொள்வனவு செய்து சரத் மோசடி செய்துள்ளதாகவும் மஹிந்தவின் வாதம் உள்ளது.ஆனால் சரத் பொன்சேகா இதற்கு நேர் எதிராக கருத்துக் கூறியுள்ளார். அரச படைகளுக்கான அத்தனை ஆயுதங்களும் கோத்தபாய ராஜபக்ஷவால் கொள்வனவு செய்யப்பட்டதே ஒழிய இந்த வியாபாரத்தின்போது விலை பேசுதல் போன்ற நிதிசார் நடவடிக்கைகள் எதிலும் தாம் ஈடுபடவே இல்லை என்கிறார் சரத். அனைத்து ஆயுதங்களும் 'Lanka Logistics' என்ற நிறுவனமூடாகவே வாங்கப்பட்டதாகக் கூறும் சரத் இந்நிறுவனத்தின் தலைவரும் கோத்தபாய தான் என்று கூறியுள்ளார்.
"ஆயுத கொள்வனவு குறித்த விசாரணைகள் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த விசாரணை எதிர்காலத்திலும் கூட நடைபெறலாம். எனக்கு அந்த விசாரணைகளை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் அவ்விசாரணையை நடத்தி முடித்துக் காட்டுவேன்" என சரத் பொன்சேகா தாம் தான் அடுத்த ஜனாதிபதி என்பதுபோல கருத்துக்கள் கூறியுள்ளார்.தற்போதைய அரசாங்கம், எடுத்த குற்றச்சாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் தாமே காரணம் என்பது போல தம்மீது குற்றம் சாட்டி வருவதாகக் கூறிய சரத் பொன்சேகா உண்மையில் அரசுதான் பாதாளக்கும்பலுடன் தொடர்பு இருந்து சகல குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறது என்றார். தேர்தல் பிரச்சாரம் தொடங்காத கட்டத்திலேயே இதுபோன்று இரு பகுதியும் கருத்துக்கள் வெளியிட தொடங்கியுள்ள நிலையில், பிர்ச்சாரம் தொடங்கினால் இன்னும் சிறப்பாக களைகட்டும் போல உள்ளது.