பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Monday, November 9, 2009

"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்?


என்னடா, இவனுக்கு இதைப் பத்தி ஒரு ஆராய்ச்சின்னு நீங்க நினைக்கலாம். பல சமயங்களில் கவனிச்ச ஒன்று தாங்க இது.நிறைய பேரு நின்னுட்டு டீ குடிச்சிட்டு இருப்பாங்க, சமோசா, பஜ்ஜி சாப்பிட்டுட்டு இருப்பாங்க. ஆனா, அவங்க எல்லாம் பிச்சைக்காரர்களுக்கு முதல் டார்கெட் கிடையாது. யாரு சிகரெட் புடிச்சிட்டு இருக்காங்களோ, அவங்கள தான் முதல்ல அட்டாக் பண்ணுவாங்க. அதுவும் பல தடவை, இல்லைமா, போயிட்டு வாங்க...அப்படின்னு சொன்னாலும் போக மாட்டாங்க. எந்த பக்கம் மாறி மாறி நின்னாலும், எதிர்ல வந்து நின்னு, காசு கொடுக்குற வரைக்கும் விட மாட்டாங்க.
சரி, அப்படி என்ன தான்யா தம் அடிக்கிறவங்க கிட்ட இருக்கு. எதுக்கு அவங்கள எல்லா பக்கமும் அணை கட்டுற மாதிரி, சுத்தி சுத்தி வந்து பிச்சை கேக்குறாங்கன்னு, கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சு பார்த்தபோது தான் தோணுச்சு, சரி இதைப் பற்றியே ஒரு பதிவு போட்டுறலாம்.
எல்லாப் பிச்சைக்காரர்களும் ஒரே மாதிரி இல்லைங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையா இருப்பாங்க.சிலர் வீடு வீடாக சென்று உணவு வாங்கிச் செல்பவர்கள், சிலர் சிக்னலில் பிச்சை எடுப்பவர்கள், சிலர் பொட்டிக் கடை,டீக்கடை அருகில் பிச்சை எடுப்பவர்கள், சிலர் கோவில் வாயிலில் பிச்சை எடுப்பவர்கள் என பல வகைகள் உண்டு.
ஆனா, என்ன தான் பிச்சைக்காரர்களாக இருந்தாலும், யாரிடத்தில், எப்பொழுது, எப்படி பிச்சைக் கேட்டால் பிச்சை கிடைக்கும் என்பதை சரியாக தெரிந்து வைத்திருப்பார்கள்.இந்த சூழ்நிலையில் பிச்சைக் கேட்டால், அவனால மறுக்கவே முடியாது என்பதை அறிந்து ஒரு Clear Strategy யுடன் பிச்சை எடுப்பவர்கள் பலர். அப்படி ரொம்ப டெக்னிகலா ப்ளான் பண்ணி பிச்சை எடுப்பவர்களிடம் எந்த மாதிரியான சூழ்நிலைகள்ல, நாம எப்படியெல்லாம் மாட்டிக்கிறோம்னு இப்போ பார்ப்போம்.


சூழ்நிலை 1: வேலை செய்கிற,30 வயதுடைய ஒருவர் தம் அடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பிச்சை கேட்பதின் நோக்கம்.


ஐயா, நல்லா இருக்க உடம்பை கெடுத்துக்குறதுக்கே நீங்க ரூ.4.50 செலவு பண்றீங்களே, நாங்கல்லாம் சோத்துக்கே வழி இல்லாம இருக்கோமே, எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன் என்று சொல்வது போல இருக்கும் அவர்களின் பாவணை.
பல சமயங்களில் நமக்கே ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படும்...என்னடா நம்ம சிகரெட் பிடிக்க இவ்ளோ செலவு பண்றோம், ஆனா அவங்க சாப்பாட்டுக்கே வழி இல்லாம காசு கேக்குறாங்களே.....கிட்ட தட்ட ஒரு குற்ற உணர்ச்சி மாதிரி தோணும். சரி, கொடுத்துடுவோம்னு பெரும்பாலான தம் பிரியர்கள் நினைக்குறாங்க.


சூழ்நிலை 2 : கல்லூரி வளாகத்தின் வெளியே ஒரு மாணவன், புகை வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.


ராசா, உங்களப் பெத்தவங்க, படிக்கக் கொடுத்த காசை, புகையையாய் எறிச்சுத் தள்ளுறீங்க. கஷ்டப்பட்டு அப்பா அனுப்புற காசை மொத்தமும் ஊதி அழிக்காம, எங்களுக்கும் கொடுத்தீங்கன்னா புண்ணியமாவது வந்து சேரும் ராசா...
நம்மாளு வேற வழி இல்லாம 50 காசோ, 1 ரூபாயோ போட்டு அனுப்புவார்.


சூழ்நிலை 3: காதலனும் காதலியும் தனிமையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஒருவர் பிச்சைக் கேட்கிறார்.


சாதாரண சமயங்களில், எச்சைக் கையில் காக்கா கூட ஓட்டாதவராக இருக்கும் காதலன், காதலியுடன் இருப்பதால், உடனே பர்சை எடுத்து டகால்னு ஒரு 5 ரூபாய் எடுத்துக் கொடுப்பார்(1 ரூபாய் 2 ரூபாய் சில்லரை இருக்கும்). "என்னாங்க...பிச்சைக்காரனுக்கு போய் 5 ரூபாய் போடுறீங்க..இதெல்லாம் டூ மச் ங்க..." என்பாள் காதலி. "இல்லம்மா ...சேஞ் இல்லை..its OK." என்று பொய் சொல்லி, தன் இமேஜை கொடை வள்ளல் ரேஞ்சுக்கு டெவலப் செய்து கொள்வான் காதலன்.


சூழ்நிலை 4: கல்யாண வயசுல இருக்க பெண்ணை அழைத்துக்கொண்டு, குடும்பத்தோட கோவிலுக்குப் போறாங்க. அங்க, கோவில் வாசலில்ஒருவர் பிச்சைக் கேட்க அமர்ந்திருக்கிறார்.


"அம்மா, இது உங்க பொண்ணுங்களா அம்மா. எம்பெருமான் அருளால, பொண்ணுக்கு சீக்கிரமா ஒரு வரன் அமையும். சந்தோஷமா கோயிலுக்குப் போயிட்டு வாங்க..."
அடடா.....நம்ம நினைச்சுட்டு வந்த விஷயத்தை அப்படியே சொல்றாரே...நுழையும் போதே நல்ல வார்த்தை சொல்றாரே...இவர் வாக்கு பளிக்கனும்னு நினைச்சு...அவர் தட்டுல ஒரு கணிசமான தொகை விழுறது நிச்சயம்.


சூழ்நிலை 5: பிளாட்பார்ம் கடையில இட்லி சாப்பிட்டுட்டு இருப்போம். அப்போ ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்கிறார்.


சாரி பா சேஞ்ச் இல்லை" என்று சொல்லிவிட்டு கடையில் பணம் கொடுக்கிறார். மிச்சம் சில்லரையை கொடுக்கிறார் கடைக்காரர்.
இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் அதே பிச்சைக்காரர் மறுபடியும் கேட்கிறார் : )
இந்த மாதிரி பல சூழ்நிலைகளில், பிச்சைக்காரர்களை தவிர்ப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷய்ம் தான்.
பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவதிலேயே நமக்குள்ள பல பாலிசிகள் இருக்கும். சின்ன பசங்களுக்கு பிச்சை போடக்கூடாது. உடல் குறைபாடுகள் இருக்கவங்களுக்கோ, முதியவர்களுக்கோ பிச்சை போடலாம்.இப்போதெல்லாம், பிச்சை என்பது பணம் புழங்கும் பெரிய தொழிலாகி விட்டது. இப்படியெல்லாம் சொல்லுவோம்.
இப்படி என்ன தான் காரணங்கள் சொன்னாலும், அவர்களுடைய வயிற்றுப் பசியின் கோரம், விகாரமாக ஒலித்தும் ,நம் மூளை அதனை நிராகரிப்பது என்பது பல சமயங்களில் வருத்தமான மேட்டராவே இருக்குங்க