பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, December 3, 2009

இத்தாலி பெண்மணி இந்தியாவுக்கு அன்னையாகலாம்; ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு அம்மாவாகலாம்; என் தலைவன் எனக்கு அண்ணனாகக் கூடாதா? சீமானுடன் ஒரு நேர்காணல்

வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சீமான், அங்கே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். ‘பிரிவினையைத் தூண்டும் விதமாக சீமான் பேசினார்’ என கனடா அரசு குற்றம்சாட்ட… இன்னொரு புறமோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடாவுக்கு விசிட் அடிக்கும் நேரத்தில், தேவையற்ற சலசலப்புகளைத் தடுக்கும் விதமாகவே சீமான் திருப்பி அனுப்பப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் நாம் சீமானை சந்தித்தோம்.
”கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?”

”வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ‘ஈழமுரசு’ என்னை அழைத்திருந்தது. இதற்கிடையில் 25-ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசினேன். அங்கே பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் ஒரு வார்த்தையைக்கூட நான் உச்சரிக்கவில்லை. ‘தந்தையர் நாடாக நாம் நினைத்த இந்தியாவும், உலக நாடுகளும் ஈழ தேசத்தை அவமான சாட்சியாக்கிவிட்டன.
நாம் எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இனி யாரையும் நம்பி பலனில்லை. நமக்கான சுதந்திரம், நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம்; உணர்வையும் ஒற்றுமையையும் கொடுத்தால் போதும்!’ என்பதுதான் அங்கே நான் வைத்த பிரதான வாதம்.
இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம் கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ… அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.”

”கைது நடவடிக்கை மிகக் கடுமையாக

இருந்ததாகச் சொல்லப்படுகிறதே?”


”மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை என்னை எழுப்பியது கனடா நாட்டு போலீஸ். ‘இந்தியாவை பழித்துப் பேசியது ஏன்?’ எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார்.
பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, ‘ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறீர்களா?’ என்றார். ‘உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா காந்தியைக் கொன்றார்களே… அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா?’ எனக் கேட்டேன். இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது. உடனே நானும் தலைவர் பிரபாகரனும் இருக்கும் படத்தைக் காட்டி, ‘இவர் உன்னோட பிரதரா?’ எனக் கேட்டார். ‘ஆமாம்… தமிழ் ரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர் சகோதரர்தான்!’ எனச் சொன்னேன். அடுத்தடுத்தும் ரெண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக என்னைக் குடைந்து கொண்டே இருந்தார். எதையாவது என் வாயிலிருந்து பிடுங்கி, என்னை நிரந்தரமாக கனடா சிறை யிலேயே சிக்க வைத்து விட வேண்டும் என்பதுதான் அவருடைய திட்டமாகத் தெரிந்தது.”


”பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், மறைந்து விட்டதாகவும் மாறி மாறிக் கிளம்பும் செய்திகளால், உலகத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே? இதனால்தான், தமிழகத் தலைவர்கள் பலரும் வெளிநாடுகளில் தங்ளுக்குள் சங்கடம் நேரலாம் என்றெண்ணி இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை என்றும் கருத்து நிலவுகிறதே?”

”வெளிநாடுவாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான் அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப் பெருகியிருக்கிறது. வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், கருணா போன்ற வர்களின் ஆதரவாளர்கள்தான் தேவையற்ற குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள். பிரபா கரனும், அவர் தலைமையிலான தேசிய ராணுவமும் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் – அதையே நம்பும் உலக நாடுகள், புலிகள் அமைப்பு மீதான தடையை இப்போதாவது நீக்க வேண்டியதுதானே? இல்லாத இயக்கத்துக்கு ஏன் தடை நீட்டிக்கிறீர்கள்? தரிசு என்று சொல்லிக்கொண்டே, அந்த நிலத்துக்கு வேலி போடும் முரண்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏன் கடைப்பிடிக்கின்றன? தலைவர் பிரபாகரன் நிஜமாகவே கொல்லப்பட்டிருந்தால், அவருக்குரிய வீர வணக்கத்தை தமிழர்கள் தைரியமாக நிகழ்த்தி இருப்பார்கள்.”